Bandi Sanjay Arrested: தெலங்கானா பாஜக தலைவர் கைது.. காரணம் என்ன?
Telangana BJP President Bandi Sanjay Kumar arrested: தெலங்கானா பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
10ம் வகுப்பு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தெலங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் கைது செய்யப்பட்டுள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்
பாஜக பிரமுகர் பரம் பிரசாந்த் என்பவர் வாட்ஸ் அப் மூலம் வினாத்தாளை பண்டி சஞ்சய்க்கு அனுப்பியது கண்டறியப்பட்டது.
அதைத் தொடர்ந்து, பண்டி சஞ்சயை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பிரசாந்த் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பண்டி சஞ்சய் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
"செகந்திராபாத்தில் இருந்து திருப்பதிக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைக்க ஏப்ரல் 8-ம் தேதி தெலங்கானாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வரவுள்ளார். ரூ.10ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்கவுள்ளார்.
அதற்கான ஏற்பாடுகளை சீர்குலைக்கும் வகையிலான பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) அரசின் முயற்சிதான் இந்த கைது நடவடிக்கை" என்று சஞ்சய் குற்றம்சாட்டினார்.
முன்னதாக, கைது செய்ய போலீஸார் பண்டி சஞ்சய் இடத்திற்கு சென்றனர். அப்போது என்ன வழக்கு, கைது வாரண்ட் இருக்கிறதா? என காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டார் பண்டி சஞ்சய்.
அவரிடம் கேள்வித் தாள் கசிவு விவரத்தை எடுத்துக் கூறினர். பின்னர், அவரை குண்டுகட்டாக தூக்கிச் செல்ல போலீஸார் முயன்றனர்.
அப்போது பண்டி சஞ்சய் ஆதரவாளர்கள் போலீஸாரைத் தடுக்க முயன்றனர்.
சிலர் இந்த நிகழ்வை வீடியோவாக பதிவு செய்தனர். கைது நடவடிக்கையின்போது எடுக்கப்பட்ட வீடியோக்களை சமூக வலைத்தளமான ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் பண்டி சஞ்சய்.
தெலங்கானா மாநில பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (டிஎஸ்பிஎஸ்சி) வினாத்தாள் கடந்த மாதம் ஒரு ஊழியரால் கசிந்ததாகக் கூறப்பட்டதை அடுத்து, பண்டி சஞ்சய் மாநில அரசை கடுமையாக விமர்சித்தார்.
இதைத் தொடர்ந்து வினாத்தாள் கசிவு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) மார்ச் 24ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு பண்டி சஞ்சய்க்கு சம்மன் அனுப்பியது. தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவின் உறவினர்கள் இந்த வினாத்தாள் கசிவுக்கு பின்னணியில் இருப்பதாக சஞ்சய் கூறியதை அடுத்து, அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்