Uttar Pradesh: வேலியே பயிரை மேயலாமா ஆபீசர்? போக்சோவில் காவலர் கைது!
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் மாணவியின் பெயரில் போலி சமூக வலை தள கணக்கு துவங்கி அதில் ஆபாச வீடியோக்களை காவலர் ஒருவரே பதிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
உத்தரபிதேச மாநிலத்தில் யோகி ஆத்தியநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் பரோலியில் உள்ள காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த கான்ஸ்டபிள் ஓம் ஷியாம் ஹரி. இவர் மீது 17 வயது மாணவி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.
அந்த புகாரில் போலீஸ் கான்ஸ்டபிள் ஓம் ஷியாம் ஹரி என் மொபைல் போன் எண்ணை கட்டாயப்படுத்தி வாங்கினார். பின்னர் அடிக்கடி போனில் அழைத்து எனக்கு பாலில் தொல்லை கொடுத்து வந்தார். இதனால் நான் வேறு வழி தெரியாமல் அவரது எண்ணை பிளாக் செய்து விட்டேன். இதனால் ஆத்திரம் அடைந்த ஓம் ஷியாம் ஹரி என் பெயரில் போலியாக கணக்கு துவங்கி அதில் ஆபாச வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
இதனால் நான் அவரிடம் இந்த வீடியோக்களை நீக்குமாறு கெஞ்சினேன். ஆனால் அவர் என்னை மிரட்டினார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது புகாரில் கூறி இருந்தார்.
இதைத்தொடர்ந்து காவல்துறையினர் மாணவியின் புகார் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் மாணவியின் புகாரில் உண்மை இருப்பதை கண்டு காவலர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து ஓம் ஷியாம் ஹரிமீது போக்சோ உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் உடனடியாக ஓம் ஷ்யாம் ஹரியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
பாலியல் குற்றங்களில் உரிய நடவடிக்கை எடுக்ககூடிய பொறுப்பில் உள்ள காவலர் ஒருவரே மாணவியிடம் அத்து மீறி நடந்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்