Qatar Court Verdict Row: கத்தாரில் மரண தண்டனை-8 இந்தியர்களின் குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் ஜெய்சங்கர்
கத்தாரில் சிறையில் வைக்கப்பட்டுள்ள எட்டு கடற்படை வீரர்களை விடுவிக்க அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்று ஜெய்சங்கர் அவர்களின் குடும்ப உறுப்பினர்களை சந்தித்த பின்னர் தெரிவித்தார்.
கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்திய முன்னாள் கடற்படை வீரர்களின் குடும்ப உறுப்பினர்களை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திங்கள்கிழமை சந்தித்து, இந்த வழக்கை அரசு மிக முக்கியத்துவத்துடன் தொடர்கிறது என்று அவர்களிடம் கூறினார்.
ட்ரெண்டிங் செய்திகள்
அவர்களை விடுவிக்க அரசாங்கம் தொடர்ந்து அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என வெளியுறவு அமைச்சர் X இல் பதிவிட்டுள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது:
கத்தாரில் சிறையில் வைக்கப்பட்டுள்ள 8 இந்தியர்களின் குடும்பத்தினரை இன்று காலை சந்தித்தேன். இந்த வழக்குக்கு அரசாங்கம் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்று அவர்களிடம் உறுதியளித்தேன். அந்தக் குடும்பங்களின் கவலைகள் மற்றும் வலிகளை முழுமையாகப் பகிர்ந்து கொண்டேன். அவர்கள் விடுதலையைப் பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசாங்கம் தொடர்ந்து மேற்கொள்ளும்." என்று அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.
அக்டோபர் 26 அன்று, கத்தார் நீதிமன்றம், இந்திய கடற்படையில் பணிபுரிந்த 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதித்தது. 2022 ஆகஸ்ட் மாதம் உளவு பார்த்ததாக குற்றச்சாட்டின் பேரில் அவர்களை கத்தார் போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட போது அவர்கள் அனைவரும் தஹ்ரா குளோபல் என்ற தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார்.
இந்த தீர்ப்புக்கு இந்தியா தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியது. கத்தார் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்துப் போராடப் போவதாகத் தெரிவித்துள்ளது. "மரண தண்டனையின் தீர்ப்பால் நாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளோம், விரிவான தீர்ப்புக்காக காத்திருக்கிறோம். நாங்கள் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சட்டக் குழுவுடன் தொடர்பில் இருக்கிறோம், மேலும் அனைத்து சட்ட வாய்ப்புகளையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்" என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் உடனடியாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்திருந்தது.
டாபிக்ஸ்