INDIA vs MODI: ’மோடியை எதிர்க்கும் இந்தியா’ பெயருக்கு காரணம் சொல்லும் எதிர்க்கட்சிகள்!
”காங்கிரஸ் தரப்பில் இருந்து பரிதுரை செய்யப்பட்ட இந்தியா (I.N.D.I.A - INDIAN NATIONAL DEMOCRATIC INCLUSIVE ALLIANCE) என்ற பெயர் கூட்டணிக்கு பெயராக தேர்வு செய்யப்பட்டுள்ளது.”
பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு ’இந்தியா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கான விளக்கங்களும் அளிக்கப்பட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தி வருகின்றன.
கடந்த ஜூன் 23ஆம் தேதி பீகார் மாநிலம் பாட்னாவில் முதல் கூட்டம் நடைபெற்ற நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இரண்டாவது கூட்டம் நேற்று தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, விசிக, மதிமுக, ஐயூஎம்எல், கொமதேக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய லோக் தளம், ஆம் ஆத்மி, தேசிய மாநாட்டு கட்சி, தேசியவாத காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட 26 கட்சிகள் பங்கேற்றுள்ளன.
ஏற்கெனவே காங்கிரஸ் தலைமையில் இருந்த பழைய கூட்டணியின் பெயரான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) என்பதற்கு பதில் புதிய பெயரை வைப்பது குறித்த ஆலோசனை நடைபெற்றது.
இந்த கூட்டணிக்கு இந்திய மக்கள் முன்னணி என்ற பெயரை மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், இந்தியாவை காப்போம் கூட்டணி (SAVE INDIA ALLIANCE) அல்லது மதசார்பற்ற இந்திய கூட்டணி (SECULAR INDIA) என்ற பெயரை விசிக தலைவர் திருமாவளவனும் முன்மொழிந்து இருந்தனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் தரப்பில் இருந்து பரிதுரை செய்யப்பட்ட இந்தியா (I.N.D.I.A - INDIAN NATIONAL DEMOCRATIC INCLUSIVE ALLIANCE) என்ற பெயர் கூட்டணிக்கு பெயராக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மோடிக்கு எதிராக இந்தியா ஒருங்கிணைந்து உள்ளதை வெளிப்படுத்தும் வகையில் இக்கூட்டணிக்கு இந்தியா என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அடுத்த கூட்டத்தை மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடத்தவும் 'இந்தியா’ கூட்டணி கட்சிகள் சார்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முதல் கூட்டம் ஐக்கிய ஜனதாதளம் ஆளும் பீகாரிலும் இரண்டாவது கூட்டம் காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவிலும் நடைபெற்ற நிலையில் மூன்றாவது கூட்டத்தை பாஜக ஆளும் மகாராஷ்டிராவில் நடத்த முடிவு செய்துள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.