தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Ht Elections Story: ‘நாடாளுமன்ற தேர்தல் 1984!’ இந்திரா காந்தி படுகொலை! 414 இடங்களில் வென்ற காங்! எதிர்கட்சியான Ntr!

HT Elections Story: ‘நாடாளுமன்ற தேர்தல் 1984!’ இந்திரா காந்தி படுகொலை! 414 இடங்களில் வென்ற காங்! எதிர்கட்சியான NTR!

Kathiravan V HT Tamil
Feb 12, 2024 06:10 AM IST

”HT Elections Story: 1984 தேர்தலுக்கு பிறகு 2014 ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் எந்த கட்சியும் தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைக்கவில்லை என்ற புதிய வரலாறும் பின்னர் உருவானது”

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரலாறு 1984
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரலாறு 1984

ட்ரெண்டிங் செய்திகள்

இந்திய குடியரசு

நாடு விடுதலை அடைந்த பிறகு 1950 ஜனவரி 26ஆம் ஆண்டு இந்தியா தன்னை குடியரசு நாடாக அறிவித்துக் கொண்டது. முதல் முறையாக சாதி, மதம், இனம், மொழி, பாலினம், சமூக, உள்ளிட்ட எந்த வித பேதமும் இன்றி 21 வயது நிரம்பிய இந்தியர்கள் அனைவருக்கும் வாக்குரிமையை இந்தியக் குடியரசு வழங்கியது.

காங்கிரஸின் தொடர் வெற்றிகள்

1952, 1957, 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தல்களில் வென்று ஜவஹர்லால் நேரு பிரதமர் ஆக இருந்தார். 1964 ஆம் ஆண்டு நேரு இறந்த நிலையில் லால் பகதூர் சாஸ்திரி பிரதமர் ஆனார். சாஸ்திரியின் மறைவுக்கு பிறகு 1966ஆம் ஆண்டு இந்திரா காந்தி பிரதமர் ஆகி இருந்தார். 1967, 1971 ஆகிய தேர்தல்களில் இந்திரா காந்தி வெற்றி பெற்றார்.

ஜனதா எழுச்சியும்! வீழ்ச்சியும்!

எமர்ஜென்சி காலத்தில் இந்திரா காந்தியின் அடக்குமுறைகளுக்கு எதிராக ஸ்தாபன காங்கிரஸ், பாரதிய ஜனசங்கம், சோலியலிஸ்டுகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் இணைந்து ஜனதா கட்சியை தொடங்கின. 

1977ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மொரார்ஜி தேசாய் பிரதமர் ஆனார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் நம்பிக்கையை இழந்ததால் பதவியை ராஜினாமா செய்தார். அடுத்து வந்த சரண்சிங் அரசால் பெரும்பான்மை நிரூபிக்க முடியாததால் ஆட்சி தாமாகவே கவிழ்ந்தது. 

மீண்டும் இந்திரா

1980ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இந்திரா காந்தி மீண்டும்  பிரதமர் ஆனார். சீக்கியர்களின் புனிதத்தலமான அமிர்தசரஸில் ப்ளூ ஸ்டார் ஆப்ரேஷன் என்ற ராணுவ நடவடிக்கை மூலம் அங்கிருந்த தனிநாடு கோரும் அமைப்புகளை இந்திரா காந்தி அடக்கினார். 

இந்திரா படுகொலையும் ராஜீவ் வருகையும்!

இந்த நிலையில், 1984ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி தனது சொந்த பாதுகாவலர்களால் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்சியையும், அனுதாபங்களையும் ஏற்படுத்தியது. 

இதனை தொடர்ந்து எம்.பியாக இருந்த இந்திரா காந்தியின் மகன் ராஜீவ் காந்தி உடனடியாக பிரதமராக பதவி ஏற்றார்.  நாடாளுமன்றத்திற்கு 6 மாதமே ஆயுட்காலம் இருந்ததால், ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை நடத்த குடியரசுத் தலைவருக்கு ராஜீவ் பரிந்துரை செய்தார். தாம் நேரடியாக மக்களால் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதற்காக இந்த முடிவை எடுத்ததாக ராஜீவ் காந்தி கூறினார். 

414 இடங்களில் அமோக வெற்றி 

இந்திரா காந்தி படுகொலையால் ஏற்பட்ட அனுதாப அலை காரணமாக மொத்தமுள்ள 514 இடங்களில் 414 இடங்களில் காங்கிரஸ் கட்சி வென்று அமோக வெற்றி பெற்றது. 

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் இவ்வளவு இடங்களை இதுவரை எந்த கட்சியும் பெறவில்லை என்பது இதுவரை முறியடிக்க முடியாத வரலாறு. 

கவனிக்கப்பட்ட என்.டி.ஆர் கட்சி

இந்திரா காந்தியின் அனுதாப அலைகளுக்கு மத்திலும், என்.டி.ராமாராவ்வின் தெலுங்கு தேசம் கட்சி ஆந்திராவில் 30 இடங்களை வென்று நாடாளுமன்றத்தின் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது.

புதிய வரலாற்றை படைத்த 1984 தேர்தல்!

1984 தேர்தலுக்கு பிறகு 2014 ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் எந்த கட்சியும் தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைக்கவில்லை என்ற புதிய வரலாறும் பின்னர் உருவானது. 

தமிழ்நாட்டை பொறுத்தவரை எம்ஜிஆர் உடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சி போட்டியிட்டதில் காங்கிரஸ் 25 இடங்களிலும், அதிமுக 12 இடங்களிலும் வென்றது. எதிர்க்கட்சியான திமுகவால் வெறும் 2 இடங்களையே வெல்ல முடிந்தது. தமிழ்நாட்டை சேர்ந்த ப.சிதம்பரம் மற்றும் எம்.அருணாச்சலம் ஆகியோர் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றனர். 

IPL_Entry_Point