Disinfectant : கிருமிக்கொல்லிகளை சாப்பிட்டு வளரும் கிருமிகள் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
Disinfectant : சமீபத்திய ICMR இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் ஆய்வில் கடைசிக்கட்ட கிருமிக்கொல்லியான கார்போபெனாம் வகை கிருமிக்கொல்லிகளுக்கு, கிருமிகள் மேலும் எதிர்ப்புத்தன்மை பெற்று வருவது உறுதியாகியுள்ளது.
ஆச்சர்யமாக இருக்கிறதா? நாம் கொசுக்களை ஒழிக்க பயன்படுத்தும் கிருமிக்கொல்லிகளை சாப்பிட்டு வளரும் கொசுக்கள் உருவாக துவங்கிவிட்டன. நாம் கிருமிகளை கொல்ல பயன்படுத்தும் பற்பசைகளை சாப்பிட்டு வளரக்கூடிய கிருமிகளும் வளரத்துவங்கிவிட்டன. எனில், கிருமிக்கொல்லிகளால் பயனில்லாத நிலை உருவாகி வரும் வேளையில் நாம் என்ன செய்யப்போகிறோம்?
ட்ரெண்டிங் செய்திகள்
கிருமிகளால் தாக்கப்பட்டு உயிருக்கு போராடுபவர்களுக்கு கடைசிக் கட்ட கிருமிக்கொல்லிகள் பயன்படுத்தப்படும். அவை நன்கு வேலை செய்தால் உயிர் பிழைக்கும் வாய்ப்புண்டு. கிருமிகள், கிருமிக்கொல்லிகளுக்கு நோய் எதிர்ப்புத்தன்மை பெற்றுவிட்டால் நிலைமை மோசமாகி கிருமிகளால் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க முடியாது.
சமீபத்திய ICMR இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் ஆய்வில் கடைசிக்கட்ட கிருமிக்கொல்லியான கார்போபெனாம் வகை கிருமிக்கொல்லிகளுக்கு, கிருமிகள் மேலும் எதிர்ப்புத்தன்மை பெற்று வருவது உறுதியாகியுள்ளது.
தேவையற்று கிருமிக்கொல்லிகள், (பாக்டீரியா, வைரஸ், பூஞ்ஞைக் காளான் போன்றவைகளுக்கு எதிரான மருந்துகள்) பயன்படுத்தப்படுவதால், இந்த எதிர்ப்புத்தன்மை கிருமிகளிடம் உருவாகியுள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஒரு லட்சம் நோயாளிகளின் பரிசோதனை முடிவுகளை 2022ம் ஆண்டு ஜனவரி 1 - டிசம்பர் 31ம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் உள்ள 21 உயர் சிகிச்சை மையங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிகரித்து வரும் கிருமிகளின் கடைசிக் கட்ட கிருமிகொல்லிகள் மீதான எதிர்ப்புத்தன்மை தெரியவந்துள்ளது.
பாதிப்பை ஏற்படுத்தும் முக்கிய கிருமிகளாக ஈகோலி, கிளப்சில்லா நிமோனியே என 2 வகை பாக்டீரியாக்களே அதிகம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
2017ல் ஈகோலி பாதிக்கப்பட்ட 10ல் 8 பேருக்கு கார்போபெனாம் மருந்துக்கு கட்டுப்பட்டால், 2022ல் 10ல் 6 பேருக்கு மட்டுமே சரியாக அம்மருந்து வேலை செய்தது.
கிளப்சில்லா நிமோனியே கிருமியை எடுத்துக்கொண்டால் 2017ல் 10ல் 6 பேருக்கு கார்போபெனாம் மருந்திற்குக் கட்டுப்பட்டது. 2022ல் 10ல் 4 பேருக்கு மட்டுமே கட்டுப்படுகிறது.
சமீபத்தில் ஈகோலி கிருமிக்கு எதிரான மருந்துகள் மேற்கத்திய நாடுகளில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டாலும், சில வகை ஈகோலி கிருமிகள் அதற்கும் கட்டுப்படாது என ஆய்வாளர் காமினி வாலியா (ICMR) தெரிவித்துள்ளார்.
கிருமிகளில் கிருமிகொல்லிகளுக்கு எதிரான மாற்றங்கள் கடந்த 5-6 ஆண்டுகளில் அதிகம் நிகழவில்லை என்றாலும், கிருமிக்கொல்லிகளுக்கு எதிரான எதிர்ப்புத்தன்மை குறையவில்லை என்பது துயரமான செய்தியே.
சூடோமோனாஸ் கிருமிகள் கிருமிகொல்லிகளுக்கு எதிர்ப்புத்தன்மை உருவாவதற்கு நியூடெல்லி மெட்டலோ பீட்டா லேக்டமேஸ் எனும் நொதி காரணமாக உள்ளதால், அதை சமாளிக்க புது மருந்துகள் உருவாக்கப்பட்டால், பலன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதற்கெடுத்தாலும், தேவையின்றியும் கடைசிக் கட்ட கிருமிகொல்லிகளை பன்படுத்துவதே கிருமிகள் எதிர்ப்புத்தன்மை பெறுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே தேவைப்படும்போது மட்டும் கடைசிக்கட்ட கிருமிகொல்லிகளை பயன்படுத்த அரசு வழிகாட்டுதல் நெறிகளை உருவாக்கி அதை உடனடியாக நடைமுறைப்படுத்துவதே பிரச்னையை சமாளிக்க உதவும்.
டெங்கு கொசுக்களை கட்டுப்படுத்த வேதிப்பொருட்களுக்கு பதிலாக பார்ன் சுவாலோ (Barn swallow) பறவைகள் உதவும் (அவை கொசுக்களை உண்ணும்) என்பதிலிருந்து அவற்றை டெங்கு கட்டுப்பாட்டிற்கு பயன்படுத்தலாம். (கம்பூசியா,பொசிலியா வகை மீன்கள் டெங்கு முட்டைகள்/லார்வாக்களை உண்ணும் என்பதால் அவற்றையும் டெங்கு கட்டுப்பாட்டிற்கு பயன்படுத்தலாம்) இவ்வாறு மாற்று நடவடிக்கைகள் தேவை என்று மருத்துவர் புகழேந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
டாபிக்ஸ்