ரசிகர்கள் மனதில் நிற்கும் 'அருணாச்சலம்’ சுந்தர் சி-க்கு ரஜினி கொடுத்த டுவிஸ்ட்!
26 years of Arunachalam: திரையரங்கில் 175 நாட்கள் வரை ஓடி மாபெரும் ஹிட் கொடுத்த 'அருணாச்சலம்' திரைப்படம் 1997 ஆம் ஆண்டு இதே ஏப்ரல் 10 ஆம் நாளில் வெளியாகியது.
‘ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கிறான்’ என்று தனி வழியில் பயணிக்கும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பிளாக் பஸ்டர் திரைப்படம் 'அருணாச்சலம்' வெளியாகி இன்றுடன் 26 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. சுந்தர்.சி இயக்கத்தில் 1997-ம் ஆண்டு இதே ஏப்ரல் 10-ல் வெளிவந்தது 'அருணாச்சலம்'. இப்படத்தில் ரஜினியின் ஜோடியாக முதல் முறையாக செளந்தர்யா, ரம்பா ஆகியோர் நடித்திருந்தனர். மனோரமா, வடிவுக்கரசி, விசு, செந்தில், ரகுவரன் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்திருந்தனர். தேவாவின் இசையில் எல்லா பாடல்களும் ஹிட்டடித்தன.
ட்ரெண்டிங் செய்திகள்
சுந்தர்.சி இதற்கு முன் இயக்கிய படங்களில் நகைச்சுவை அதிகம் இருக்கும். அதே பாணியை அருணாச்சலத்திலும் கையாண்டார் சுந்தர்.சி. மாபெரும் வெற்றியடைந்த இப்படம் உலகளவில் ரூ. 32.71 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதில் இந்தியளவில் ரூ. 25.55 கோடிக்கும் மேல் வசூல் செய்த நிலையில், வெளிநாட்டில் ரூ. 7 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது
இப்படத்தை ரஜினிகாந்த் தனது சொந்த பேனரில் தயாரித்தார். திரையுலகில் அவருடன் பயணித்து வந்த 8 கலைஞர்களுக்கு உதவும் விதத்தில் இப்படத்தை தயாரிப்பதாக அவர்களுக்கு உதவியும் செய்தார். ரஜினியின் இந்த செயல் திரையுலகினராலும், அவருடைய ரசிகர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்டது. .
திரையரங்கில் 175 நாட்கள் வரை ஓடி மாபெரும் ஹிட் கொடுத்த இப்படத்தின் தலைப்பு எப்படி வந்தது என்று கேட்டால் அதுவும் ஒரு ஆச்சர்யமான நிகழ்வுதான். அதாவது, இந்த படத்துக்கு முதலில் ‘அருணாச்சலம்’ என்று தலைப்பு வைக்கவில்லையாம் இயக்குனர் சுந்தர்.சி. இந்த படத்துக்கு ‘குபேரன்’ என்று தான் முதலில் பெயர் வைத்திருந்தாராம். இந்த டைட்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் முன்னரே மீடியாவில் கசிய தொடங்கியது. உடனே, படக்குழுவும் ரஜினிகாந்தும் வேற ஒரு டைட்டிலை வைப்பதற்கு முடிவு செய்தனர்.
பின்னர், ரஜினிகாந்த் இயக்குனர் சுந்தர்.சியை அழைத்து சூப்பர் டைட்டில் ஒன்று யோசித்து வைத்திருக்கிறேன் உடனே வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். அங்கு ரஜினிக்கு வேண்டிய நபர் ஒருவர், சுந்தர் சி வரவும் சார்… சூப்பர் டைட்டில் சார் என்று சொல்லிருக்கிறார். என்னனு நீங்க சொல்லுங்க என்று சுந்தர் சி கேட்க அவரும் 'அருணாச்சலம்' என்று சொல்லியிருக்கிறார்.
உடனே, சுந்தர்.சி அப்செட் ஆகி இது என்ன சார் டைட்டில், அருணாச்சலம்…வேதாசலம்மனு சொல்றீங்க.. நல்ல டைட்டிலா வைக்கணும். அப்படினு சொல்லிட்டு ரஜினியிடம் செல்ல… அப்போது ரஜினி அவரது ஸ்டைலில் 'அருணாச்சலம்' என்று சொல்லியிருக்கிறார். பின்னர் சுந்தர் சி சூப்பர்..ஆ.. இருக்கு சார்னு சொல்லி ஓகே செய்தார்களாம். இதை இயக்குனர் சுந்தர் சி ஒரு தனியார் நேர்காணல் ஒன்றிக்கு பேட்டி அளித்திருப்பார்.
ரஜினிகாந்த் நடித்த சில படங்களை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது. அப்படியான படங்களின் வரிசையில் அருணாச்சலமும் இடம்பெற்றுள்ளது. இதில் ‘ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கிறான்’ என்று ரஜினி சொன்ன பேமஸ் டயலாக் இப்போதும் சூப்பர் ஸ்டார் ரசிகர்களிடம் ட்ரெண்டிங்கில் உள்ளது. அப்படிப்பட்ட ‘அருணாச்சலம்’ வெளியாகி இன்றுடன் 26 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. நேற்று ரிலீசானது போல் உள்ளது. ஆனால் 26 ஆண்டுகள் உருண்டோடியது என்றால் ஆச்சரியமாக இருக்கிறது.
டாபிக்ஸ்