Vadivelu vs Singamuthu: துன்புறுத்தும் நோக்கில் வழக்கு..அவதூறு வார்த்தை குறிப்பிடவில்லை! வடிவேலு வழக்கில் சிங்கமுத்து
Vadivelu vs Singamuthu: என்னுடைய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து பதில் நோட்டீஸ் அனுப்பிய போதிலும், என்னை துன்புறுத்தும் நோக்கில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவதூறு வார்த்தை குறித்து குறிப்பிடதாதால் இந்த வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை என சிங்கமுத்து தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு பற்றி யூடியூப் சேனல்களில் அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், நடிகர் சிங்கமுத்து பதிலளிக்குமாறு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்ற நிலையில் சிங்கமுத்து தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அவதூறு வார்த்தை பற்றி குறிப்பிடவில்லை
சிங்கமுத்து தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "நடிகர் வடிவேலு எனக்கு எதிராக கூறியுள்ள குற்றச்சாட்டுகளில் துளியும் உண்மை இல்லை.பல உண்மை தகவல்களை மறைத்து அவர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். நடிகர் வடிவேலுவுக்கு எதிராக நான் என்ன அவதூறாக பேசினேன் என்பது குறித்தும், அந்த அவதூறு வார்த்தை எது என்பது குறித்தும் அவர் தனது மனுவில் கூறவில்லை.
நான் ஒருபோதும் வடிவேலுவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்த வேண்டும் என்ற எந்த உள்நோக்கத்துடன் பேசவில்லை. எனது சொந்த திரைத் துறை அனுபவத்தில், திரைத் துறையைச் சேர்ந்தவர்களின் பொதுப்படையான கருத்துகளை மட்டுமே தெரிவித்திருந்தேன். மானநஷ்ட ஈடு கோரி வழக்கு தொடரும் அளவுக்கு இந்த வழக்கில் எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை.