நல்ல நடிகர், சமூக சேவகர் என மக்களை கவர்ந்த மயில்சாமி கடந்து வந்த பாதை..!
Actor Mayilsamy: சினிமாவை தாண்டி பொதுநலம் தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்தி மக்களின் நன்மதிப்பை பெற்றவர் நடிகர் மயில்சாமி.
பிரபல நகைச்சுவை நடிகரான மயில்சாமி இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 57. மயில்சாமியின் இறப்பு தமிழ் சினிமாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் பல்வேறு குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து மக்களை கவர்ந்தவர் மயில்சாமி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிறந்த இவர், முதன் முதலில் மிமிக்கிரி கலையால் பொதுவெளியில் அறியப்பட்டார். 1984ஆம் ஆண்டு 'தாவணி கனவுகள்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இதையடுத்து 1985 ஆம் ஆண்டு கன்னிராசி படத்திலும் டெலிவரி பாய் வேடத்தில் நடித்திருந்தார்.
கமல்ஹாசனின் வெற்றி விழா, அபூர்வ சகோதரர்கள், ரஜினிகாந்தின் பணக்காரன், உழைப்பாளி படங்களிலும் நடித்திருந்தார். விஜயகாந்துடன் சின்னகவுண்டர், சத்யராஜூடன் வால்டர் வெற்றிவேல் உள்ளிட்ட எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார். இவை தவிர இன்றைய இளைய தலைமுறைகளின் மணங்களை வென்ற நாயகர்கள் நடிகர் விஜய்யுடன் கில்லி, அஜித்துடன் ஆசை, வேதாளம், வீரம், விக்ரமுடன் தூள் படத்திலும், ராகவா லாரன்ஸுடன் காஞ்சனா படத்திலும் நடித்துள்ளார்.
2000 ஆம் ஆண்டுக்கு பிறகு பலரும் அறியப்படும் நடிகராக பல படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் தொடர்ந்து நடித்து வந்தார் மயில்சாமி. மறைந்த நடிகர் விவேக் உடன் இணைந்து நடித்த பல திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களின் மனதில் நீக்கா இடம்பெற்றிருந்தன. தமிழ் சினிமாவில் காமெடி, குணசித்திர வேடம் என பல பரிமாணங்களில் இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.இவர் கடைசியாக நடித்த படம் உடன்பால்.
திரைப்படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி இருக்கிறார். சினிமாவை தாண்டி பொதுநலம் தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்தி மக்களின் நன்மதிப்பை பெற்றவர்.
30 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் பயணித்த மயில்சாமி 2021 ஆம் ஆண்டு விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வியை தழுவினார். சமூக உணர்வு, சமூக அக்கறை கொண்ட மயில்சாமி கொரோனா காலகட்டத்தில் தனது விருகம்பாக்கம் தொகுதியில் ஏராளமான நலத்திட்ட உதவிகளை செய்திருந்தார். சிறந்த சிவபக்தரான நடிகர் மயில்சாமி மஹா சிவராத்திரி தினத்திலேயே சிவனடி சேர்ந்து விட்டார் என்ற செய்தி திரைத்துறையினர் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டாபிக்ஸ்