MK Stalin: 'இந்தியா கூட்டணியின் ஒற்றுமையால் மட்டுமே மோடியை வீழ்த்த முடியும்’ ஸ்டாலினின் உரையை படித்த திருச்சி சிவா!
”இது போன்ற கைதுகள், அரட்டல் மிரட்டல்கள் அனைத்தும் 'இந்தியா' கூட்டணியை வலிமையாக ஆக்கியதே தவிர பலவீனப்படுத்த வில்லை”

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து இன்று (31.3.2024) தில்லியில் இந்தியா கூட்டணியின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்களின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா கலந்து முதலமைச்சரின் உரையை வாசித்தார்.
எனது இனிய நண்பரும் - டெல்லி மாநிலத்தின் முதலமைச்சருமான மாண்புமிகு அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு எனது கடுமையான கண்டனத்தையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தனக்கு எதிராக 'இந்தியா' என்ற வலிமையான கூட்டணியை எதிர்க்கட்சிகள் அனைத்தும் சேர்ந்து அமைத்தது முதல் நிலைகொள்ளாமல் தவறுகளுக்கு மேல் தவறுகளைச் செய்து வருகிறது பாஜக தலைமை. 'இந்தியா' என்ற பெயரே அவர்களுக்கு கசப்பானதாக மாறியது. இந்தியா கூட்டணித் தலைவர்கள் அனைவரையும் ஏதோ இந்த நாட்டின் எதிரிகளைப் போல நடத்தத் தொடங்கியது பாஜக தலைமை. பாஜக அல்லாத மாநிலங்களை ஆளும் அரசுகளை, மிகமோசமாக நடத்தினார்கள். ஆட்சிகளைக் கவிழ்ப்பது, கூட்டணிகளை உடைப்பது, எம்.எல்.ஏ.க்களை இழுப்பது என அனைத்து இழிவான செயல்களையும் செய்தார்கள்.