தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Eps: ’கைத்தறி நெசவாளர்களை கண்டுக்கவே இல்ல!’ காஞ்சியில் பாஜக தேர்தல் அறிக்கையை விளாசிய ஈபிஎஸ்!

EPS: ’கைத்தறி நெசவாளர்களை கண்டுக்கவே இல்ல!’ காஞ்சியில் பாஜக தேர்தல் அறிக்கையை விளாசிய ஈபிஎஸ்!

Kathiravan V HT Tamil
Apr 15, 2024 12:26 PM IST

”அதிமுக மூன்றாகவும், நான்காவும் போய்விட்டது என ஸ்டாலின் பேசுகிறார். ஸ்டாலின் அவர்களே நீங்கள் காஞ்சிக்கு வந்து பாருங்கள்! இன்று காஞ்சிபுரமே குலுங்கும் அளவுக்கு மக்கள் வெள்ளம் உள்ளது”

காஞ்சிபுரம் தேரடி பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
காஞ்சிபுரம் தேரடி பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி

ட்ரெண்டிங் செய்திகள்

அப்போது பேசிய அவர், காஞ்சிபுரம் என்று சொன்னாலே பேரறிஞர் அண்ணா பிறந்த புண்ணியபூமி, நம்முடைய கட்சியின் பெயரே அண்ணா! நமது கொடியில் அண்ணா இருக்கிறார்! அண்ணா பிறந்த மண்ணிலே தேர்தல் பிரச்சாரம் செய்ய வாய்ப்பளித்த இறைவனுக்கு நன்றி. அண்ணாவின் கனவை எம்ஜிஆரும், எம்ஜிஆரின் கனவை அம்மாவும் நிறைவேற்றினார்கள். 

இதனால்தான் ஏழை என்ற சொல் இல்லை என்ற நிலை வந்துள்ளது. ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என அண்ணா அவர்கள் சொன்னார்கள், எப்போது ஏழைகள் சிரிக்கின்றார்களோ அப்போதுதான் நாடு சுபிட்சம் பெறும். 

அதிமுக மூன்றாகவும், நான்காவும் போய்விட்டது என ஸ்டாலின் பேசுகிறார். ஸ்டாலின் அவர்களே நீங்கள் காஞ்சிக்கு வந்து பாருங்கள்! இன்று காஞ்சிபுரமே குலுங்கும் அளவுக்கு மக்கள் வெள்ளம் உள்ளது. 

அண்ணா கண்ட கனவு நிச்சயம் நிறைவேற்றியே தீருவோம். அது இருபெரும் தலைவர்களின் கொள்கை லட்சியம். ஏரிகள் நிறைந்த மாவட்டமாக காஞ்சிபுரம் உள்ளது. விவசாயிகளும், நெசவாளர்களும் இங்கு நிறைந்து உள்ளனர். 

அண்ணா, எம்ஜிஆர், அம்மா ஆகியோர் மறைந்தாலும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். ஆனால் இன்னும் சில தலைவர்கள் தங்கள் வீட்டு மக்களுக்காக வாழ்கிறார்கள். கருணாநிதி அவர்கள் குடும்பம் வீட்டு மக்களுக்காக வாழும் குடும்பம். 

இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ அதிமுக அட்சிதான் காரணம். ஏரிகள் நிறைந்த மாவட்டமான இங்குதான் நான் குடிமராமத்து பணிகளை தொடங்கி வைத்தேன்.  

காஞ்சிபுரத்தில் கைத்தறி  தொழில் முற்றிலுமாக பாதித்து உள்ளது. நமது அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றால் கைத்தறி குறித்து குரல் கொடுப்பார். 

பாஜக தேர்தல் அறிக்கையில் கைத்தறி நெசவு குறித்து எதையும் குறிப்பிடவில்லை. நெசவாளர்களை பற்றி மத்தியில் ஆளும் அரசுகள் கவலைப்படுவதே இல்லை. ஆனால் அதிமுக ஆட்சியில் கைத்தறி நெசவாளர்களுக்கு மானியம் தரப்பட்டது. இந்த தொழில் பாதுகாக்கப்பட்டது. 

காஞ்சிபுரம் என்று சொன்னாலே பட்டுதான் நினைவுக்கு வரும். காஞ்சிபுரம் சிறப்பு மிக்க நகரமாக திகழ்கிறது. இந்த தொழில்கள் சிறக்க மத்திய,மாநில அரசுகள் எதையும் செய்யவில்லை. 

மின் கட்டண உயர்வு காரணமாக நெசவுத்தொழில் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது. திமுக அரசு வந்தாலே மின் கட்டணம் உயர்ந்துவிடும், எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருமோ அப்போதெல்லாம் மின் வெட்டு உள்ளது. 

விடியா திமுக ஆட்சி பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் ஒரு கிலோ அரிசி 18 ரூபாய் உயர்ந்துவிட்டது. எண்ணெய், சர்க்கரை, மளிகை சாமான் விலைகள் உயர்ந்துவிட்டது. 

திமுக ஆட்சி மக்களுக்கு நன்மை செய்வதாக ஸ்டாலின் சொல்கிறார். ஆனால் மக்கள் விரோத ஆட்சியாக மக்கள் பார்க்கின்றனர். அதிமுக ஆட்சி எப்போதெல்லாம் நடக்கிறதோ அப்போதெல்லாம் விலைவாசியை கட்டுக்குள் வைத்து இருந்தோம். 

தமிழ்நாட்டில் சர்வசாதாரணமாக கஞ்சா விற்கிறார்கள். முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவால் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த முடியவில்லை. திமுகவினர்தான் கஞ்சா விற்பனை செய்கின்றனர்.  போதை பொருள் கடத்தல் வழக்கில் திமுகவை சேர்ந்த அயலக அணி நிர்வாகி டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.  பொம்மை முதலமைச்சரால் போதை பொருள் புழக்கத்தை கடுப்படுத்த முடியவில்லை என எடப்பாடி பழனிசாமி பேசினார். 

WhatsApp channel