பக்தர்களுக்கு குட் நியூஸ்..சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல மீண்டும் அனுமதி!
Sathuragiri Temple: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில். சுமார் 4,500 அடி உயரத்தில் இருக்கும் பிரசித்தி பெற்ற இந்த கோயிலுக்கு அடர்ந்த வனப்பகுதிகளை கடந்து கரடுமுரடான மலை பாதையில் 10 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும்.
இந்த கோயிலில் அமாவாசை, பௌர்ணமி மற்றும் பிரதோஷ நாட்களில் மட்டுமே பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல், ஆடி அமாவாசை, தை அமாவாசைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படும். இந்த நிலையில் ஆடி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டுக்காக நேற்று முதல் ஆகஸ்ட் 2 வரை பக்தர்கள் சதுரகிரி மலையேறி சாமி தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் மற்றும் வனத்துறை அனுமதி வழங்கி இருந்தது.
இதனிடையே இரு தினங்களுக்கு முன்பு சாப்டூர் வனசரகத்துக்கு உட்பட்ட ஐந்தாவது பீட்டில் சதுரகிரி மலையை ஓட்டியுள்ள வனப்பகுதியில் காட்டுத் தீ பரவியது. இதன் காரணமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக சதுரகிரிக்கு வந்திருந்தனர். வனத்துறையினர் அனுமதி வழங்காத காரணத்தால் தாணிப்பாறை அடிவாரப் பகுதியிலேயே முடி காணிக்கை எடுத்தல் பொங்கல் வைத்து தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்களை செலுத்திவிட்டு திரும்பிச் சென்றனர்.
இந்த நிலையில், காட்டுத் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டுள்ளதால் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் மலை ஏறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்