MS Dhoni:உலகக் கோப்பை வென்று 12 ஆண்டுகள் நிறைவு-நிகழ்ச்சியில் மனம் திறந்த தோனி
Apr 02, 2023, 10:24 PM IST
2011 World Cup Cricket: இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சஞ்சனா கணேசன் மற்றும் விருந்தினராக வந்த முன்னாள் ஆஸி., வீரர் மைக் ஹஸ்ஸி ஆகியோரிடம் உலகக் கோப்பை போட்டி நடந்த அன்று சில தகவல்களை தோனி பகிர்ந்தார்.
இந்திய கிரிக்கெட் அணிக்கு 1983ம் ஆண்டுக்கு பிறகு உலகக் கோப்பை என்பது வெறும் கனவாகவே இருந்து வந்தது.
அந்தக் கனவை நனவாக்கிக் கொடுத்தவர் தோனி. தோனியின் தலைமையிலான இந்திய அணி 2011ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்று அசத்தியது.
அதிலும் அந்த ஆட்டத்தில் வின்னிங் ஷாட்டாக சிக்ஸரை அடித்து முடித்திருந்தார் தோனி. இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா உலகக் கோப்பை சாம்பியன் ஆனது.
எந்தவொரு கிரிக்கெட் ரசிகராலும் அந்த உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தையும் தோனியின் வின்னிங் ஷாட்டையும் மறக்க முடியாது.
ஏப்ரல் 2ம் தேதி தான் அந்த ஆட்டம் நடந்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த வெற்றியைப் பெற்று இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு பெற்றது.
இதையொட்டி, FanCraze நிறுவனம் தோனிக்கு நினைவுப் பரிசை வழங்கியது. இந்த நினைவுப் பரிசை ஐசிசி டிஜிட்டல் தலைவர் ஃபின் பிராட்ஷா, ஃபேன்கிரேஸ் நிறுவனர் அன்ஷும் பாம்ப்ரி ஆகியோர் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சஞ்சனா கணேசன் மற்றும் விருந்தினராக வந்த முன்னாள் ஆஸி., வீரர் மைக் ஹஸ்ஸி ஆகியோரிடம் உலகக் கோப்பை போட்டி நடந்த அன்று சில தகவல்களை தோனி பகிர்ந்தார்.
அவர் கூறியதாவது:
உலகக் கோப்பையை வென்ற அன்று இலங்கை அணி பதிவு செய்த ஸ்கோரை சேஸிங் செய்தோம். நிறைய ரன்கள் தேவைப்படவில்லை. பார்ட்னர்ஷிப்பும் நன்றாக இருந்தது. ஆனால், பனிப்பொழிவு இருந்தது.
ஸ்டேடியத்தில் வந்தே மாதரம் பாடத் தொடங்கி விட்டனர். அந்த சூழ்நிலையை மறுபடியும் உருவாக்க முடியாது. ஒருவேளை இந்த ஆண்டு உலகக் கோப்பையில் அதேபோன்று ஒரு சூழல் உருவாகலாம்.
ஆனால், அந்த தருணத்தில் அணி ஜெயிக்கவில்லை. ஆட்டம் முடிவதற்கு 15 முதல் 20 நிமிடங்களுக்கு முன்பாகவே மிகவும் உணர்வுப்பூர்வமாக உணர்ந்தேன். அதேநேரம், எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும் என முடிவு செய்தேன்.
நாங்கள் ஜெயிப்போம் என்று எங்களுக்குத் தெரியும். எனவே, இலக்கை மட்டுமே மனதில் வைத்திருந்தேன். ஜெயித்த பிறகு முழு சந்தோஷத்துடன் கொண்டாடிக் கொள்ளலாம் என்று கூறிக் கொண்டேன்.
அந்த சமயத்தில் தான் அழுத்தம் உருவானது. நாங்கள் பார்த்து ரசித்த வீரரான சச்சின் டெண்டுல்கருக்கும் அதுவே கடைசி உலகக் கோப்பை. எனவே நாங்கள் எப்படியாவது வென்றே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் விளையாடினோம் என்றார் தோனி.
டாபிக்ஸ்