Herbal Medicine: தொண்டை கிருமி தொற்றை தடுக்கும் ஆடாதோடை மூலிகையின் பிற பலன்கள்
May 24, 2023, 01:14 PM IST
தொண்டை கிருமி தொற்றை தடுக்கும் ஆடாதோடை மூலிகையின் பிற பலன்கள் குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.
புதர் செடி வகையைச் சேர்ந்தது இந்த ஆடாதோடை மூலிகை. ஆடாதொடை குத்துச்செடி என்றும் அழைப்பர். இந்தச் செடி நாலு முதல் பத்தடி வரை வளரும். இலைகள் மாவிலை போல் நீளமாக ஈட்டி வடிவத்தில் இருக்கும். இலைகள் அடர்த்தியாக இருக்கும். தென்னிந்தியாவில் அதிகம் பயிராகிறது. இத்தாவரத்துத்கு தண்ணீர் அதிகம் தேவைப்படாது.
ஆடாதோடை செடியின் இலைகள் மிகவும் கசப்புத்தன்மை கொண்டவை. எனவே, ஆடு மாடுகள் இதை சாப்பிடாது. ஆடு தொடாத இலை என்பதனால் ஆடு தொடா இலை என்பது மருவி ஆடாதோடை இலை என்று ஆயிற்று. ஒரு சிலர் இதனை ஆடாதொடை இலை என்றும் கூறுவர். ஆடு மாடுகள் நெருங்காது என்பதனால் இதனை தோட்டங்களில் வேலிப்பயிராக நட்டுவிடுவார்கள்.
'ஆடாதோடைப் பன்ன மையறுக்கும் வாதமுதற்
கோடாகோ டிச்சுரத்தின் கோதொழிக்கும்- நாடின
மிகுத்தெ ழுந்தசன்னி பதின்மூன்றும் விலக்கும்
அகத்துநோய் போக்கு மறி'.
- என்று அகத்திய மாமுனியால் போற்றப்பட்ட ஆடாதோடை செடி ஒரு அரிய வகை மூலிகையாகும்.
Adhatoda vasica என்பது இதன் தாவரவியல் பெயராக அறியப்படுகிறது. இச்செடியின் வேறு பெயர் வாசை.
ஆடாதோடை செடியின் இலை, பூ, வேர், பட்டை என அனைத்து பாகங்களும் மருந்தாகப் பயன்படுகிறது. எளிதாக வீட்டு மருத்துவமாக இந்த மூலிகையைப் பயன்படுத்தலாம். சித்த மருத்துவத்தில் ஆடாதோடை செடியின் இலைகளை அதிகம் பயன்படுத்துவார்கள்.
ஆடாதோடையின் சிறப்பு, அதன் இலை நன்கு பாடக்கூடிய குரல் வளத்தை வழங்கக் கூடியது . ஆடாதோடையின் குணத்தை உரைக்க, 'ஆடாதோடைக்குப் பாடாத நாவும் பாடும்' என்ற சித்தர் வரிகளால் அறியலாம்.
பாடும் குழந்தைகளுக்கோ, தொழில்முறை பாடகர்களுக்கோ குரல் கம்மல் இருக்கக்கூடாது. தொண்டைக் கட்டாமல் இருக்க அவர்கள் பயிற்சி மற்றும் உணவுக்கட்டுப்பாடு மேற்கொள்வார்கள். அவர்கள் ஆடாதோடையை கஷாயமாகவோ, சிரப் ஆகவோ சேர்த்துக் கொண்டால் நல்ல குரல் வளம் பெறுவதோடு தங்கள் தொண்டையை கிருமித் தொற்று ஏற்படாமல் காத்துக் கொள்ளலாம்.
ஆடா தோடை இலையைப் பயன்படுத்தும் முறை-
ஆடாதோடை குடிநீர் என்றால் குடிக்கும் மருந்து நீர் அதாவது நாம் கஷாயம் என்று சொல்வதன் தூய தமிழ் பெயர். இந்த குடீநீர் தயாரித்து அருந்தி வர தொண்டைக் கட்டு, தொண்டை தொற்று நீங்கி விடும்.
அதேபோல் ஜலதோஷம், இருமலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆடாதோடை நெய் அருமருந்தாகும்.
டாபிக்ஸ்