Karaikudi: கலப்பு திருமணம் செய்த மகள்; விரக்தியில் தாய் எடுத்த விபரீத முடிவு!
மகள் கலப்பு திருமணம் செய்து கொண்டதால் மனமுடைந்த தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் காரைக்குடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தன் வார்த்தையை மீறி மகள் கலப்பு திருமணம் செய்து கொண்டதால் கண்கலங்கிய தாய் பூச்சி மருந்தை குடித்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ட்ரெண்டிங் செய்திகள்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பாபுரம் சொர்க்க விநாயகர் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் அழகு. இவரது மனைவி சரிதா (40). இவரது மூத்த மகள் ஜனனி என்பவர் வேறு சாதியைச் சேர்ந்தவரை காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் தாய் சரிதாவுக்கு தெரியவர, மகள் ஜனனியை கண்டித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2ஆம் தேதியன்று தான் காதலித்து வந்த மாற்று சாதியைச் சேர்ந்த தனது காதலரை ஜனனி கலப்பு திருமணம் செய்து கொண்டார். இதனால் மனவேதனையுடன் இருந்து வந்த அவரது தாய் சரிதா, நேற்று இரவு பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அழகப்பாபுரம் காவல் நிலையத்தில் சரிதாவின் கணவர் அழகு புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், சரிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மகளின் கலப்பு திருமணத்தால் மனமுடைந்த தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காரைக்குடியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது:
வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம்.
மாநில உதவி மையம் :104
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)