தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Trichi Ramajeyam Murder Case Suspects Undergo Fact Checking Detector Test

ராமஜெயம் கொலை வழக்கு: 2வது நாளாக உண்மை கண்டறியும் சோதனை-அவிழாத மர்மம் வெளிவருமா?

Karthikeyan S HT Tamil
Jan 19, 2023 01:07 PM IST

Trichy Ramajeyam Murder Case: உண்மை கண்டறியும் சோதனைகள் மூலம் ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை வெளிவருமா ? என்று அமைச்சர் நேரு குடும்பத்தினர் உள்ளிட்ட பலரும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

தொழிலதிபர் ராமஜெயம் - கோப்புபடம்
தொழிலதிபர் ராமஜெயம் - கோப்புபடம்

ட்ரெண்டிங் செய்திகள்

திருச்சி கல்லணை சாலையில் முட்புதரில் கை, கால்கள் இரும்புக் கம்பியால் கட்டப்பட்டு கிடந்த உடலை கைப்பற்றிய ஸ்ரீரங்கம் போலீசார் மர்ம கொலை குறித்து விசாரணை நடத்தினர். 12-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைத்தும் போலீசாருக்கு எந்தத் துப்பும் கிடைக்கவில்லை.

தமிழகத்தையே உலுக்கிய இந்த கொலை வழக்கை 10 ஆண்டுகளாக போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்தும் கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த வழக்கை சிபிசிஐடி மற்றும் சிபிஐ விசாரணை செய்தும் குற்றவாளிகள் யாரென்று கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ஜெயக்குமார் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. எஸ்பி ஜெயக்குமார் தலைமையிலான 40 பேர் அடங்கிய போலீசார் இந்த வழக்கை மீண்டும் விசாரித்து வருகின்றனர்.

இந்த சிறப்பு புலனாய்வு குழு பல்வேறு கோணங்களில் பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது. ராமஜெயம் கொலை நடந்த காலகட்டத்தில் திருச்சியில் முகாமிட்டிருந்த ரவுடி கும்பல் பெயர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்த வழக்கு தொடர்பாக தமிழகத்தின் முக்கியமான ரவுடிகள் 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவினர் திருச்சி நீதிமன்றத்தில் அனுமதி பெற்றிருந்தது. 

இதையடுத்து ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த டெல்லியில் உள்ள ஆய்வகத்தில் முறைப்படியான அனுமதி பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயவியல் கூடத்தில் உண்மை கண்டறியும் சோதனை நேற்று (ஜன.18) தொடங்கியது.

பிரபல ரவுடிகள் மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ்குமார், சத்யராஜ் ஆகிய 4 பேரிடம் நேற்று உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையை டெல்லியில் இருந்து வந்துள்ள உண்மை கண்டறியும் நிபுணர்கள் நடத்தினர்.அப்போது எஸ்.பி. ஜெயக்குமார் மற்றும் சோதனை நடத்தப்படும் நபரின் வழக்கறிஞர் ஆகியோரும் உடனிருந்தனர்.

நேற்று 4 பேருக்கு சோதனை நடத்தப்பட்ட நிலையில் இன்றும் 4 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட உள்ளது. சாமி ரவி, மாரிமுத்து, ராஜ்குமார், சிவா ஆகியோரிடம் உண்மை கண்டறியும் சோதனை இன்று நடைபெறுகிறது. லெப்ட் செந்தில், கலைவாணன், சுரேந்தர், திலீப் ஆகிய நான்கு பேரிடமும் நாளை மற்றும் நாளை மறுதினம் சோதனை நடத்தப்பட உள்ளது.

இந்த உண்மை கண்டறியும் சோதனைகள் மூலம் தமிழகத்தையே உலுக்கிய தொழிலதிபர் ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை வெளிவருமா ? என்று அமைச்சர் கே.என். நேரு குடும்பத்தினர் உள்ளிட்ட பலரும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்