தேர்வறைக்குள் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்: மாணவி செய்த தரமான சம்பவம்!
Kanyakumari: தேர்வறைக்குள் 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கன்னியாகுமரியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
ட்ரெண்டிங் செய்திகள்
தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 6-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுத்தேர்வு அறை கண்காணிப்பாளர் பணியில் 55,000 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். முறைகேடுகளை தடுக்க 4,235 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பொதுத்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்வது, துண்டுத்தாள் அல்லது பிற மாணவர்களை பார்த்து எழுதுதல், தேர்வு அதிகாரியிடம் முறைகேடாக நடந்து கொள்ளுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல் ஆகிய ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் அந்த மாணவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கன்னியாகுமரி மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு 116 மையங்களில் நடந்து வருகிறது. மணலிக்கறை பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 6-ந் தேதி மாணவ, மாணவிகள் தமிழ் தேர்வு எழுதினர். அந்த மையத்துக்கு தேர்வறை கண்காணிப்பாளராக அழகியபாண்டிபுரம் அருமனை அருகே உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் வேலவன் என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார்.
தேர்வறைக்கு சென்ற அவர் தேர்வு எழுதிக் கொண்டிருந்த ஒரு மாணவியை தொட்டு பேசியபடி சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிா்ச்சி அடைந்த அந்த மாணவி தேர்வு முடிந்ததும் வீட்டுக்கு வந்து பெற்றோரிடம் நடந்தவற்றை கூறியிருக்கிறார். உடனே பள்ளி நிர்வாகத்திடம் பெற்றோர் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் குறித்து கல்வித்துறைக்கும், குழித்துறை அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் நேற்று ஆசிரியர் வேலவனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தேர்வு அறையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவியிடம் சில்மிஷம் செய்ததாக ஆசிரியர் கைதான சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
டாபிக்ஸ்