Salem Fisherman Death : மீனவர் கொல்லப்பட்ட விவகாரம்.. சேலம் எஸ்.பி. பகீர் தகவல்!
உயிரிழந்த மீனவர் ராஜா குறித்து சேலம் மாவட்ட கண்காணிப்பாளர் சிவகுமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழக கர்நாடக எல்லையில் உள்ளது பாலாறு வனப்பகுதி. இங்கு காவிரியும் பாலாறும் கலக்கும் இடத்தில் தமிழக மீனவர்கள் பரிசலில் சென்று மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை பரிசல்களில் சென்ற மீனவர்கள் பாலாற்றில் மீன் பிடிப்பதில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த கர்நாடக வனத்துறையினர் மீனவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்
பாலாற்றங்கரையில் இருந்த பரிசல்களையும் வலைகளையும் கர்நாடக வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அதில் சிலர் தப்பி கிராமங்களுக்கு சென்று விட்டனர். ஆனால் இந்த சம்பவத்தையடுத்து கோவிந்தபாடியை சேர்ந்த காரவடையான் என்கிற ராஜா மட்டும் காணாமல் போயிருந்தார்.
இதனால் கர்நாடக வனத்துறை துப்பாக்கி சூட்டில் அவர் பலியாகி இருக்கலாம் என கிராம மக்கள் பாலாற்றங்கரையில் தேடி வந்தனர். இதைத்தொடர்ந்து இரு மாநில எல்லையில் பதற்றம் நிலவி வந்தது. இதற்கிடையே காணாமல் போன மீனவர் ராஜா கர்நாடக எல்லையை ஒட்டிய அடிப்பாலாறு பகுதியில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், நேற்று நடைபெற்ற பிரேத பரிசோதனை முடிவில் ராஜாவின் உடலில் குண்டு எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டது. குண்டடிப்பட்டதற்கான அடையாளம் ஏதும் இல்லை என தகவல் கசிந்ததால் முழுமையான பிரேத பரிசோதனை அறிக்கை வரும் வரை ராஜாவின் உடலை வாங்க மாட்டோம் என தெரிவித்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவரும் சொந்த ஊருக்கு கிளம்பிச் சென்றனர்.
இந்நிலையில் உயிரிழந்த மீனவர் ராஜா குறித்து சேலம் மாவட்ட கண்காணிப்பாளர் சிவகுமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”ராஜா பற்றி விசாரணை செய்ததில் அவர் வன விலங்குகளை வேட்டையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். கடந்த 2014ஆம் ஆண்டு கோவிந்தபாடியை சேர்ந்த பழனி என்பவருடன் கர்நாடக மாநிலம் கோபிநத்தம் வனப்பகுதிக்கு வேட்டைக்கு சென்ற போது வனத்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பழனி இறந்து விட்டார்.
ராஜா தப்பித்து வந்து ஊர் மக்களிடம் தகவல் தெரிவித்தார். இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் கர்நாடக வனத்துறையினரின் சோதனைச் சாவடியை சேதப்படுத்தினர். இந்த சம்பவம் குறித்து மாதேஸ்வரன் மலை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது
இதேபோல் வனவிலங்கு வேட்டையாடும் குற்றங்களில் ராஜா ஈடுபட்டது தொடர்பாக ஈரோடு சென்னம்பட்டி வனச்சரகத்தில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இவரது நடவடிக்கைகள் தொடர்ந்து சரியில்லாததால் அரிசிபாளையம் கிராமத்தில் இவர் மீது வனவிலங்கு வேட்டையாடும் குற்றங்களில் ஈடுபடக் கூடாது என அறிவுறுத்தி தீர்மானம் போட்டுள்ளனர். அவ்வாறு இருந்தும் மீண்டும் வனப்பகுதிக்கு சென்றதால் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.