Chennai: மகன்கள் கண் முன்னே பறிப்போன ரவுடி உயிர்; பின்னணி என்ன?
ஆதம்பாக்கம் அருகே மகன்கள் கண் முன்னே ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை: ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர் 3 ஆவது தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (40). ரவுடியான இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் தனது வீட்டின் அருகில் வசித்த உறவினர் மாரிமுத்து என்பவரின் 16 ஆவது நாள் காரிய துக்க நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் இரவு பங்கேற்றார்.
ட்ரெண்டிங் செய்திகள்
பின்னர் வீட்டின் வெளியே நாற்காலியில் அமர்ந்துபேசிக் கொண்டு இருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 8 பேர் கொண்ட மர்ம கும்பல் சீனிவாசனை, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். இதில் தலையில் பலத்த காயமடைந்த சீனிவாசன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
முன்னதாக மர்ம நபர்கள் தங்கள் தந்தையை வெட்டுவதை கண்டு அதிர்ச்சி அடைந்த சீனிவாசனின் மூத்த மகன் நாகராஜ் (17), இளைய மகன் பிரதாப் சீனிவாசன் (15) ஆகிய இருவரும் மர்ம கும்பலை தடுக்க முயன்றனர்.
அப்போது அவர்கள் கத்தியால் தாக்கியதில் பிரதாப் வலது கையில் வெட்டு விழுந்தது. மகன்கள் கண் எதிரேயே சீனிவாசனை வெட்டிக் கொன்றுவிட்டு மர்மகும்பல் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டது.
காயம் அடைந்த பிரதாப், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்."
இந்த கொலை வழக்கு தொடர்பாக 10 பேரை காவலர்கள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆதம்பாக்கம் சட்டம்- ஒழுங்கு காவல் இன்ஸ்பெக்டர் வீரமணி, பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ரவுடிகளை கட்டுப்படுத்த தவறியதாக அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கிலும், 2021 ஆம் ஆண்டு ஆதம்பாக்கம் பகுதியில் பிரபல ரவுடியான நாகூர் மீரான் கொலை வழக்கிலும் சீனிவாசன் சிறைக்கு சென்று வந்தவர் என கூறப்படுகிறது.
இந்த இரு கொலைகளுக்கும் பழி தீர்க்கும் விதமாக சீனிவாசனை மர்ம கும்பல் கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
டாபிக்ஸ்