குருத்திகா பட்டேல் வழக்கு: முன் ஜாமீன் கோரிய மனு தள்ளுபடி
குருத்திகாவின் உறவினர் மற்றும் பெற்றோர்கள் என 12 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தென்காசியில் காதல் திருமணம் செய்த குருத்திகா பட்டேல் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களால் கடத்தப்பட்ட வழக்கில் பெண்ணின் உறவினர்கள் விஷால், கீர்த்தி பட்டேல் மற்றும் சண்முகராஜ் ஆகியோர் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த நிலையில் வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
தென்காசியில் காதல் திருமணம் செய்த குருத்திகா பட்டேலை கடத்தியதாக காதலன் மாரியப்பன் வினித் தென்காசி, குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் அந்த பெண்ணின் உறவினர் மற்றும் பெற்றோர்கள் என 12 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை அடுத்து ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தனர்.
அப்போது உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை ஜாமீன் கோரியவர்களுக்கு ஜாமீன் வழங்கியும் முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தும் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் குருத்திகா பட்டேலின் உறவினர்களான விஷால், கீர்த்தி பட்டேல் மற்றும் சண்முகராஜ் ஆகியோர் தங்களுக்கு முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ஏற்கனவே முன்ஜாமீன் கோரிய வழக்கில் மனுதாரர்கள் காவல் நிலையத்தில் சரணடைய உத்தரவிடப்பட்டது. ஆனால் மனுதாரர்கள் சரணடையவில்லை மேலும் விசாரணையானது நடைபெற்று வருவதால் முன் ஜாமின் வழங்க கூடாது என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதி, மனுதாரருக்கு முந்தைய முன் ஜாமீன் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து தகவல் தெரிவிக்கவில்லை என்றார். மேலும் அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டத்தை பதிவு செய்து கொண்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்