MK Alagiri: ’தாசில்தாருக்கு கும்மாங்குத்து விட்ட வழக்கு!’ மு.க.அழகிரி விடுதலை! கடைசில அதுதான் ட்விட்ஸ்டே!
“இந்த வழக்கில் தன்னை மு.க.அழகிரி தாக்கியதாக கூறி புகார் அளித்த தாசில்தார் காளிமுத்து, நீதிமன்றத்தில் பிறழ்சாட்சி சொன்னதால் இந்த தீர்ப்பு சாத்தியமாகி உள்ளதாக வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்”
தாசில்தாரை தாக்கிய வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்
கடந்த 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் பரப்புரையின்போது, மேலூர் வல்லடிக்காரர் கோயிலில் மு.க.அழகிரி உள்ளிட்டோர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாகவும், அதனை வீடியோ எடுக்க சென்ற எங்களை மு.க.அழகிரி உள்ளிட்டோர் தாக்கியதாக அப்போதைய தாசில்தார் காளிமுத்து கீழவளவு காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மு.க.அழகிரி உள்ளிட்ட 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 3 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்தது. முன்னதாக மேலூர் நீதிமன்றத்திலும் விசாரணை நடைபெற்றது.
கடந்த 13 ஆம் தேதி அனைத்து தரப்பு வாதமும் நிறைவடைந்த நிலையில், இன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன்படி இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு வயதுமூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் உயிரிழந்த 4 பேரை தவிர மற்ற 17 பேரையும் விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் தன்னை மு.க.அழகிரி தாக்கியதாக கூறி புகார் அளித்த தாசில்தார் காளிமுத்து, நீதிமன்றத்தில் பிறழ்சாட்சி சொன்னதால் இந்த தீர்ப்பு சாத்தியமாகி உள்ளதாக வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
தன்னை மு.க.அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் யாரும் தாக்கவில்லை என்றும், கோயிலுக்கு செருப்பு அணிந்து சென்றதால் அங்குள்ள ஊர் மக்கள் தாக்கியதாகவும் தாசில்தார் காளிமுத்து பிறழ்சாட்சி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.