மதுரையில் Rapido பைக் டாக்ஸிகளுக்கு அனுமதி இல்லை - ஏன் தெரியுமா?
Ban for Rapido Bike Taxi:முறையான அங்கீகாரம் பெறாமல் மதுரையில் செயல்பட்டும் வரும் Rapido பைக் டாக்ஸிகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதுடன், தற்போது இயங்கி வரும் Rapido இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்ய மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ட்ரெண்டிங் செய்திகள்
மதுரை மாநகரில் கர்நாடகாவை தலைமையிடமாக கொண்ட தனியார் நிறுவனமான Rapido Bike Taxi, வாடகை கார்கள் இயக்குவது போல் ஆன்லைன் மொபைல் செயலியின் மூலமாகவும், இணையத்தளம் மூலம் பொதுமக்களை தொடர்பு கொள்கிறார்கள்.
இவர்கள் மோட்டார் வாகன சட்டங்கள், விதிமுறைகளின்படி முறையான அங்கீகாரம் பெறாமல் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான இருசக்கர வாகன உரிமையாளர்களை, தங்களது நிறுவனத்தின் உறுப்பினர்களாக மாற்றி மதுரை மாநகரில் உரிய அனுமதி பெறாமல் பைக் டாக்ஸிகளை இயக்கி வருவது தெரியவந்துள்ளது.
இதில் சுமார் 40க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன உரிமையாளர்கள் மீது மதுரை மாநகர போக்குவரத்து அலுவலர்கள் கடந்த வாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது அவர்களிடமிருந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதைத்தொடர்ந்து மதுரை மாநகர காவல் ஆணையர் நரேந்திர நாயர், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் அங்கீகாரம் பெறாத Rapido Bike Taxi நிறுவனத்தின் மொபைல் செயலி வழியாக பொதுமக்களை தொடர்பு கொண்டு வாடகைக்கு இரு சக்கர வாகனங்களை இயக்கும் வாகன உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுரை மாநகர போக்குவரத்து காவல் அலுவலர்கள், மதுரை சரக போக்குவரத்து இணை ஆணையர் பொன்செந்தில் நாதன், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் இணைந்து Rapido Bike Taxi வாகனங்களை பறிமுதல் செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின்போது பறிமுதல் செய்யப்படும் வாகனங்களுக்கு ரூ. 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். அத்துடன் பொதுமக்கள் இந்த நிறுவனத்தின் மூலம் தங்களது இருசக்கர வாகனங்கள் வாடகை பைக் டாக்ஸியாக பயன்படுத்தக்கூடாது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.