Tirunelveli: பறை இசை கருவிகள் எடுத்து வந்த மாணவியை பாதியிலேயே கீழே இறக்கிவிட்ட பேருந்து நடத்துனர் -
பறை இசை கருவிகளை பேருந்தில் கொண்டு சென்ற கல்லூரி மாணவியை தகாத வார்த்தைகளால் பேருந்து நடத்துனர் திட்டியதுடன, அவரை பாதி வழியிலேயே கீழே இறக்கிவிட்ட சம்பவம் திருநெல்வேலியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த மாணவி ரஞ்சிதா, திருநெல்வேலியிலுள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ படித்து வருகிறார். கல்லூரி ஆண்டு விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனது சொந்த ஊரில் இருந்து பறை இசை கருவிகளை கொண்டு வந்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்
இதையடுத்து நிகழ்ச்சி முடிந்த பின்னர் அந்த இசைக்கருவிகளை பேருந்தில் எடுத்து செல்வதற்காக மாலையில் புறப்பட்டுள்ளார். திருநெல்வேலி புதிய நிலையத்தில் மதுரை செல்லும் பேருந்தில் அவர் ஏறியுள்ளார்.
பேருந்த புறப்பட்ட நிலையில் நடத்துனர் டிக்கெட் வழங்கியபோது மாணவி வைத்திருந்த பறை கருவிகளை பார்த்து, அதனை வைப்பதற்கு பேருந்தில் இடமில்லை என கூறியுள்ளார். அத்துடன் அந்த மாணவியை பாதி வழியிலேயே கீழே இறங்க சொல்லியுள்ளார். மாணவியை பேருந்து நடந்தனர் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து வண்ணார்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிட்டு பேருந்த சென்ற நிலையில், செயவதறியாது நின்றுள்ளார் அந்த மாணவி. இதுபற்றி தகவல் தெரிந்த செய்தியாளர்கள், இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர். இதுகுறித்து உடனடியாக போக்குவரத்து கழக அலுவலரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதி அளித்ததாக தெரிகிறது.
இதற்கிடையே அரை மணி நேரம் காத்திருப்புக்கு பின்னரும் எந்த பேருந்தும் மாணவியை இசை கருவிகளுடன் ஏற்றி செல்ல மறுப்பு தெரிவித்தது. ஒரு வழியாக கோவை சென்ற பேருந்து ஒன்றின் நடத்துனர் சூழ்நிலை புரிந்துகொண்டு மதுரையில் மாணவி குறிப்பிட்ட இடத்தில் கீழே இறக்கிவிடுவதாக உறுதியளித்தார்.
இதன் பின்னர் அந்த மாணவி பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் பறை இசை கருவியை காரணம் காட்டி மாணவியை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, அவரை நடுவழியில் கீழே இறக்கி விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.