DMK vs AIADMK: ‘ரத்தக் கறையை உடல் முழுதும் பூசியது யார்?’ இபிஎஸ்.,க்கு அமைச்சர் சிவசங்கர் கேள்வி!
DMK vs AIADMK: ‘‘மசோதவை எதிர்த்த அதிமுக என்ன செய்திருக்க வேண்டும்? மசோதவிற்கு எதிராக வாக்களித்திருக்க வேண்டும் அல்லவா! ஆனால், வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தது. அதாவது மசோதா நிறைவேற மறைமுகமாக அதிமுக ஆதரவு அளித்தது’’

அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டு குறித்து, போக்குவரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பதிலளித்ததுடன், கடுமையான எதிர்ப்பையும் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதோ அவருடைய எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ள கண்டன அறிக்கை:
யார் கையில் ரத்தக் கறை?
நீட் தேர்வு தோல்வியால் தஞ்சாவூரில் மாணவர் தனுஷ் தற்கொலை செய்து கொண்ட நிலையில், எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வாய் சவடால் விட்டிருக்கிறார். ’’உயிரை மாய்த்துக் கொள்ளும் மாணவர்களின் ரத்தக் கறைகள் தனது கைகளில் இருப்பதை முதல்வர் உணரவேண்டும்’’ என சொல்லியிருக்கிறார்.
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு உத்தரவிட்டு 13 அப்பாவிகளை துள்ளத் துடிக்க கொன்று ரத்தகறை படிந்த கைகளில்தான் இந்த ட்விட்டை போட்டிருக்கிறார் பழனிசாமி. ‘’நீட் தேர்வினால் ஏழை மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற தவறான பொய்யை மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார்’’ என ஆட்சியில் இருந்த போது சொன்னவர்தான் பழனிசாமி.