‘மார்பிங்‘ புகைப்பட மிரட்டல் - பெண்ணிடம் ஜிபேயில் ரூ.2 லட்சம் பறித்த சகோதரர்கள்
Crime News: சமூக வலைதளங்களில் நடிகர்கள் பெயரில் போலி கணக்குகள் துவங்கி பெண்களை மிரட்டி பணம் பறித்த அண்ணன், தம்பி கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் பி.பி.அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் சாபுதீன். இவரது மகன்கள் அலாவுதீன் (27), வாகித் (25). இவர்கள் இருவரும் கூட்டாக தமிழ் சினிமா நடிகர் ஒருவரின் புகைப்படத்தை பயன்படுத்தி முகநூலில் அவரது பெயரிலேயே போலி கணக்கை உருவாக்கி உள்ளனர். அதன்மூலம் காஞ்சீபுரத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு நட்பு அழைப்பு விடுத்துள்ளனர். அதை ஏற்ற அந்தப்பெண்ணும் அவர் நடிகர் என்று எண்ணி அவருடன் நன்றாக பேசியுள்ளார். நட்பு ஆழமானதையடுத்து அவர்கள் வாட்ஸ்அப்பில் பேசிக்கொள்ள துவங்கினார்கள். மேலும், வீடியோகாலில் பேசி அந்த பெண்ணின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை ஸ்கிரீன் ஷாட் எடுத்து வைத்துக்கொண்டு அந்த பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
ட்ரெண்டிங் செய்திகள்
ஆனால் அந்தப்பெண் பணம் தர மறுத்துவிட்டார். உடனே அந்த பெண்ணின் புகைப்படங்களை மார்பிங் செய்து சமூகவலைதளத்தில் பகிரப்போவதாக மிரட்டி உள்ளனர், இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் ரூ.2 லட்சத்தை ஜிபே மூலமாக அனுப்பியுள்ளார். ஆனால் அவர்கள் விடாமல் அந்த பெண்ணிடம் பணம் கேட்டு தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர். இதனால் அந்த பெண் ஆன்லைன் மூலமாக காஞ்சீபுரம் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின்பேரில், வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய எஸ்பி எம்.சுதாகர் உத்தரவிட்டார். சைபர் கிரைம் ஏஎஸ்பி பாலகுமார் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ராஜகோபால் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணன், தம்பிகளான அலாவுதீன் (27) மற்றம் வாகித் (25) ஆகியோர் கூட்டாக இந்த குற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஈரோடு சென்று அவர்கள் இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் மடிக்கணினியை பறிமுதல் செய்தனர்.
நடிகர்களின் புகைப்படங்களை வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து அவர்களது பெயரிலேயே போலியான கணக்குகளை உருவாக்கியுள்ளனர். அதன்மூலம் போலியான நட்பை ஏற்படுத்தி தங்களது வலையில் சிக்கவைத்து பெண்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பெற்று அவற்றை ஆபாசமாக மார்பிங் செய்து பெண்களின் நட்பு வட்டாரங்களுக்கும், உறவினர்களுக்கும் மற்றும் சமூக வலைதளத்திலும் பகிர்வதாக மிரட்டி பணத்தை பெற்றுள்ளனர். பெண்கள் மற்றும் மாணவிகள் சமூகவலைதள பக்கங்களின் பிரபலங்களின் பெயர்களிலோ மற்றும் அறிமுகமில்லாத நபர்களிடமிருந்தோ வரும் அழைப்புகளையோ, நட்பு அழைப்புகளையோ ஏற்க வேண்டாம். சமூக வலை தளங்களை பயன்படுத்தும் பெண்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
டாபிக்ஸ்