CM Stalin : மகாராஷ்டிரா விபத்து.. உயிரிழந்த 2 தமிழர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவித்த முதல்வர்!
மகாராஷ்டிராவில் நேற்று நடந்த கிரேன் விபத்தில் உயிரிழந்த 2 தமிழர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து நாக்பூர் நகருக்கு சம்ருதி எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிரா மாநில அரசால் இந்த அதிவிரைவச் சாலை கட்டப்பட்டு வரும் இந்த சாலைக்கு சம்ருதி மஹாமார்க் என பெயரிடப்பட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
தானே அருகே நடைபெற்று வரும் கட்டுமான பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், சம்ருதி எக்ஸ்பிரஸ் சாலையில் ஷாபுர் என்ற இடத்தில் கட்டப்பட்டுவரும் பாலத்தில் இரண்டு தூண்களுக்கு இடையில் கான்கிரீட் தளத்தை தூக்கி வைப்பதற்காக கிர்டர் எனப்படும் ராட்சத கிரேன் பயன்படுத்தப்பட்டது.
திடீரென அந்த ராட்சத கிரேன் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் அங்கு கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களில் 16 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இடிபாடுகளில் சிக்கி மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்த 20 பேரில் 2 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். கிருஷ்ணகிரியை சேர்ந்த சந்தோஷ் மற்றும் திருவள்ளூரை சேர்ந்த கண்ணன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழந்த 2 குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் விரைவுச்சாலை திட்டத்துக்கான பாலம் கட்டுமானபணியின் போது ராட்சத கிரேன் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர் என்றும் அவர்களில் இருவர் கிருஷ்ணகிரி மாவட்டம், போகனப்பள்ளி ஊராட்சி, விஐபி நகரைச் சேர்ந்த திரு.சந்தோஷ் (வயது 36) மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம் ஆயக்காரன்புலத்தைச் சேர்ந்த திரு.கண்ணன் (வயது 23) என்றும் கேள்வியுற்று மிகுந்த வேதனையடைந்தேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை விமான நிலையத்திலிருந்து சொந்த ஊருக்கு கொண்டு செல்ல தமிழ்நாடு அரசின் பொதுத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் மூலம் ஒருங்கிணைந்து நடவடிக்கைகளை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.செஞ்சி.கே.எஸ்.மஸ்தான் அவர்கள் மேற்கொண்டார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும். ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.