Chennai : முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம்.உபயத்துல்லா மரணம் - முதல்வர் இரங்கல்
நான்கு முறை தஞ்சை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணி ஆற்றியவர் உபயதுல்லா
திமுகவைச் சேர்ந்த முன்னாள் வணிக அமைச்சர் எஸ். என். எம். உபயத்துல்லா உடல் நலக்குறைவால் இன்று காலமானார். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வர்த்தக அணி தலைவராக செயல்பட்டு வந்தார். தஞ்சாவூர் தொகுதியில் 1989, 1996, 2001, 2006 என நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக உபயத்துல்லா தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுக வர்த்தக அணி தலைவர் தலைமை செயற்குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்துள்ளார். மேலும் வணிகவரித்துறை அமைச்சராகவும் எஸ். என். எம். உதயதுல்லா பொறுப்பு வகித்தார். தஞ்சாவூரில் மாவட்ட திமுகவில் முக்கிய தலைவராக வழங்கினார். தமிழ்நாடு அரசின் அண்ணா துரை விருது உபயத்துல்லாவிற்கு சமீபத்தில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
ட்ரெண்டிங் செய்திகள்
இந்நிலையில் உபயதுல்லா மறைவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு இரங்கல் செய்தியில், "முன்னாள் அமைச்சரும் கழக வர்த்தக அணித் தலைவருமான திரு. எஸ்.என்.எம். உபயதுல்லா அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றேன்.
திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முதலாகத் தேர்தல் களத்தில் இறங்கிய காலத்தில் இருந்து பேரறிஞர் அண்ணாவின் மீதும் முத்தமிழறிஞர் கலைஞர் மீதும் பெரும் பற்றும் மரியாதையும் கொண்டு கழகப் பணியாற்றி வந்த திரு. உபயதுல்லா அவர்கள், என் மீது மிகுந்த அன்புக் கொண்டிருந்தவர். 1962-ஆம் ஆண்டு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் தலைவர் கலைஞர் அவர்கள் தஞ்சை தொகுதியில் போட்டியிட்டபோது அவருக்காகச் சிறப்பாகத் தேர்தல் பணியாற்றி அவரது நன்மதிப்பைப் பெற்றவர். மன்னை நாராயணசாமி. கோ.சி.மணி. தஞ்சை நடராஜன் உள்ளிட்ட ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பெருந்தலைவர்களுடன் இணைந்து கழகம் வளர்த்த தீரர்.
1987 முதல் 2014 வரை 27 ஆண்டுகள் தஞ்சை நகரக் கழகச் செயலாளராக இருந்த பெருமைக்குரியவர் உபயதுல்லா அவர்கள். நான்கு முறை தஞ்சை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணி ஆற்றிய உபயதுல்லா அவர்கள் 2006-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஐந்தாவது முறையாகத் தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றபோது வணிக வரித்துறை அமைச்சராக அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முத்தமிழறிஞர் மீது மட்டுமல்லாது, தமிழ்மொழி மீதும் காதல் கொண்டிருந்த உபயதுல்லா அவர்கள் முப்பதாண்டுகளுக்கும் மேலாக தஞ்சை முத்தமிழ் மன்றம் என்ற அமைப்பை நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது கழகப் பணிகளையும், மக்கள் பணியையும், மொழிப்பற்றையும் சிறப்பிக்கும் வகையில் 2020-ஆம் ஆண்டு கழக முப்பெரும் விழாவில் "கலைஞர் விருதினையும்", இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த அரசு விழாவில் தமிழ்நாடு அரசின் "பேரறிஞர் அண்ணா விருதினையும்" எனது கையால் வழங்கும் வாய்ப்பையும் பெற்றிருந்தேன்.
கழக நிகழ்ச்சிகளை, கூட்டங்களை எந்த இடர் வந்தாலும் எதிர்கொண்டு திறம்பட நடத்திக்காட்டும் ஆற்றல் பெற்றவர் திரு. உபயதுல்லா அவர்கள். கழகத்தின் மிகப்பெரும் தூணாக, மாறாத கொள்கைப் பற்றாளராக விளங்கிய திரு. உபயதுல்லா அவர்களின் மறைவு கழகத்துக்கும் குறிப்பாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டக் கழகத்துக்கும் பேரிழப்பு என்றே கூற வேண்டும்.
திரு. உபயதுல்லா அவர்களை இழந்து தவிக்கும் அவர்தம் குடும்பத்தினர், உறவினர் மற்றும் கழக உடன்பிறப்புகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
டாபிக்ஸ்