இன்று மாலைக்குள் நல்ல முடிவு! ஓபிஎஸ் கூறிய நிபந்தனைகள்! அண்ணாமலை பரபரப்பு பேட்டி
”அதிமுக தரப்பு தனித்தனியாக சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்டால் யாரை ஆதரிப்பீர்கள் என்ற கேள்விக்கு, ஒரு தேசியக்கட்சியால் எப்படி சுயேச்சை சின்னத்திற்கு ஆதரவு தெரிவிக்க முடியும்”
ஒருங்கிணைந்த அதிமுக குறித்து பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி பேசிய கருத்துக்கு அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் மற்றும் பாஜக தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் சிடிஆர் நிர்மல் குமார் இடையே ட்விட்டரில் கருத்து மோதல்கள் ஏற்பட்ட நிலையில் சென்னை கமலாலயத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
ட்ரெண்டிங் செய்திகள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோதே கூட்டணி தர்மம் அடிப்படையில் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும், திமுகவின் பணபலம், படைபலத்தை எதிர்கொள்ள ஒரு வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று சொல்லி இருந்தேன். ஜே.பி.நட்டா அறிவுறுத்தலில் கடந்த சில நாட்களாக பலமுறை ஈபிஎஸ், ஓபிஎஸ் இடம் பேசி இருந்தேன்.
தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் அளித்த பதில் மனுவால் வேட்பாளருக்கு சின்னம் கிடைப்பது சிக்கலாக போய்விடும் என்பது பாஜகவின் நிலைப்பாடு. கூட்டணி சார்பில் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதால்தான் பாஜக பல முயற்சிகளில் ஈடுபட்டு இருந்தோம்
ஈபிஎஸ் வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்னர் தொலைபேசியில் என்னை அழைத்து ஜனவரி 31ஆம் தேதி வரை காத்திருக்கிறேன், அதன் பிறகு வேட்பாளரை அறிவிக்கப்போவதாக சொல்லிவிட்டு வேட்பாளரை அறிவித்தார். ஈபிஎஸ் வேட்பாளரை அறிவித்ததால் ஓபிஎஸும் வேட்பாளரை அறிவித்தார்.
கூட்டணி கட்சியின் உட்கட்சி விவகாரத்தில் தலையிடக்கூடாது என்பதே பாஜகவின் நிலைப்பாடு. ஒரு வேட்பாளரை ஒரு சின்னத்தில் நிறுத்தி வெற்றி பெற வேண்டும் என ஈபிஎஸ் கூறினோம்.
கட்சி நலனுக்காக மக்கள் நலனுக்காக ஈபிஎஸ் அறிவித்துள்ள வேட்பாளரை ஆதரவு தர வேண்டும் என்ற வேண்டுகோளை ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் சந்தித்து வைத்தோம், அவரும் இரட்டை இலை சின்னம் படிவத்தில் கையெழுத்து போட தயார் என்று கூறி சில எங்களிடம் நிபந்தனைகளை கூறி இருந்தார்.
இரட்டை இலை சின்னத்தில் ஒரு வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம், அதற்காக வேலை செய்ய பாஜக தொண்டர்கள் தயார் என்ற உறுதியை ஈபிஎஸ், ஓபிஎஸிடம் அளித்தோம்.
ஒரு வேட்பாளர் உறுதியான வேட்பாளர் அந்த பகுதியில் அறிமுகமான வேட்பாளர், அந்த தொகுதி பிரதிநிதியாக இருந்த வேட்பாளர் பின்னால் அணிவகுத்து அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பை தர வேண்டும்
20 மாதங்களாக திமுக ஆட்சி மீது மக்கள் கோபத்தில் உள்ளார்கள், இடைத்தேர்தலில் பாஜக நிற்கப்போவது இல்லை என்று தெளிவாக ஓபிஎஸ், ஈபிஎஸிடம் சொல்லிவிட்டோம். இன்று நல்ல முடிவுகள் வரும் என்ற நம்பிக்கை உள்ளது.
கட்சி பிரச்னையை அவர்கள் தீர்த்துக் கொள்ள வேண்டும் அது அவர்கள் பிரச்னை, அதற்கும் பாஜகவுக்கும் சம்பந்தம் இல்லை
ஈரோட்டில் தனித்தனியாக போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு குறைவாக இருக்கும் , இதனால் ஒரு உறுதியான வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் நிற்க வேண்டும்.
இந்த பிரச்னைக்கு மாலைக்குள் நல்ல முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதிமுக தலைவர்கள் ஒன்றாக இருங்கள் என்றோ பிரியுங்கள் என்றோ பாஜக என்றும் சொன்னது கிடையாது.
அதிமுக தரப்பு தனித்தனியாக சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்டால் யாரை ஆதரிப்பீர்கள் என்ற கேள்விக்கு, ஒரு தேசியக்கட்சியால் எப்படி சுயேச்சை சின்னத்திற்கு ஆதரவு தெரிவிக்க முடியும். அதிமுக தரப்பு சுயேச்சை சின்னத்தில் நிற்கிறோம் ஆதரவு தாருங்கள் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோரை சந்தித்து பேசியது குறித்து இரண்டு தரப்பிலும் இரண்டாம் கட்ட தலைவர்கள் சமூகவலைத்தளங்களில் கருத்துகளை எழுப்பி இருந்தனர். ஒரு அறைக்கு இரண்டு தலைவர்களும் என்ன பேசினோம் என்பது தெளிவாக தெரியாத சூழலில் இத்தகைய விவாதம் வந்துள்ளது. பாஜகவிலும் சிலர் கருத்துகள் வலைத்தளத்தில் போட்டு இருந்தார்கள், நானே பாஜக நிர்வாகிகள் சிலரை எச்சரித்தேன். சண்டை மூட்டி குளிர்காய்வது பாஜகவின் நோக்கம் அல்ல என்றார்
பாஜக குறித்து அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் பேசியது குறித்த கேள்விக்கு, பொன்னையன் பேசிய ஆடியோ சில நாட்களுக்குன் வந்தது அதை நான் பேசவே வேண்டாம் என தெரிவித்தார், அரசியலில் இப்படி பேசுவது சகஜம் என்றார்.
டாபிக்ஸ்