தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Aiadmk Interim General Secretary Edappadi Palaniswami's Speech In Madurai Is Due To Amma Temple Shakti For The Supreme Court Verdict

அம்மா கோயில்தான் தீர்ப்புக்கு காரணம்! ஈபிஎஸ் நெகிழ்சி பேச்சு

Kathiravan V HT Tamil
Feb 23, 2023 12:24 PM IST

”அங்கே இருபெரும் தலைவர்கள் அருள் கொடுத்த சில நிமிடங்களிலேயே அற்புதமான செய்தி வந்தது. இது சக்தி மிக்க தெய்வங்கள் கொடுத்த பிரசாதம்”

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

ட்ரெண்டிங் செய்திகள்

உதயகுமாரின் தனிச்சிறப்பு அடக்கம்

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது, ஒவ்வொரு மனிதனுக்கும் திருமணநாள்தான் ஒரு பொன்னான நாள்தான். அப்படிப்பட்ட திருமண வாழ்க்கையில் மேடையில் வீற்றிருக்கும் 51 ஜோடிகளும் தொடங்க உள்ளார்கள்; அவர்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய வேண்டும். மணமக்கள் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து தங்கள் இல்லற வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும். ஆர்.பி.உதயக்குமார் பல்வேறு பதவிகளிலே இருந்தாலும், அடக்கம் அவருக்கு தனிச்சிறப்பாக உள்ளது. அவர் தெய்வபக்தி மிக்கவர்.

”இரவெல்லாம் தூக்கமில்லை”

நான் நேற்றையில் இருந்து கலங்கிப்போய் இருந்தேன். இன்றைய தினம் உதயகுமார் ஏற்பாட்டில் 51 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கும் பாக்கியத்தை இறைவன் தந்திருக்கின்றான், நேற்றிரவு உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வரும் என்று செய்தி கிடைத்ததும் மனதிலே ஒரு அச்சம் ஏற்பட்டது. எப்படி தீர்ப்பு இருக்கும்; என்னவாக இருக்கும் என்று எண்ணி எண்ணி இரவு தூக்கம்வரவில்லை. 

”உதட்டு சிரிப்பு உள்ளத்தில் இல்லை”

பலபேர் எண்ணிடத்திலே தொலைபேசி மூலம் பேசி வந்தார்கள். ஆஹா நம் குழந்தைகளுக்கெல்லாம் திருமணம் நடத்தி வைக்கிறோம், ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்தால் இன்னும் பெரும் மகிழ்ச்சி அடையும், எப்படி தீர்ப்பு இருக்குமோ என்ற ஐயத்தோடு நான் வந்துகொண்டு இருந்தேன். என் உதட்டில் சிரிப்பு இருந்தது, உள்ளத்தில் சிரிப்பு இல்லை.

சக்தி மிக்க தெய்வங்கள் கொடுத்த பிரசாதம்

உதயக்குமார் அவர்கள் புரட்சித் தலைவர் அம்மா அவர்களுக்கு கோயில் எழுப்பி உள்ளார். அவர் என்னிடம் காரில் ஏறியவுடன் சொன்னார் “அண்ணா திருமண மேடையில் ஏறுவதற்கு முன் அம்மா கோயிலுக்கு சென்று அம்மா, எம்ஜிஆர் சிலைகளுக்கு மாலை அணிவித்துவிட்டு பின்னர் திருமண மேடைக்கு செல்லலாம்” என்று கூறினார். அப்போது நான் வேண்டிக்கொண்டேன், இருபெரும் தலைவர்கள் ஆசியோடு நடக்கும் திருமண விழாவிலே நல்லத்தீர்ப்பு கிடைக்க வேண்டும் தெய்வமே என்று நான் வேண்டினேன். அம்மா கோயில் தெய்வபக்தியோடு இருக்கக்கூடிய கோயில், அங்கே இருபெரும் தலைவர்கள் அருள் கொடுத்த சில நிமிடங்களிலேயே அற்புதமான செய்தி வந்தது. இது சக்தி மிக்க தெய்வங்கள் கொடுத்த பிரசாதம்.

சில தீய சக்தியை சேர்ந்தவர்கள், எம்ஜிஆர் இந்த இயக்கத்தை தோற்றுவித்தபோது திமுக ஒரு தீயசக்தி அதை அழிக்கவே அதிமுகவை தொடங்கி இருப்பதாக சொன்னார். ஜெயலலிதா அவர்கள் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் வழியில் சென்று தீய சக்தியை தமிழகத்திலே ஒடுக்குவதற்கு சாதித்துக்காட்டினார். எனக்கு பின்னாலும் நூறாண்டு காலம் அதிமுக தொடரும் என்று அம்மா பேசியது இன்று சாத்தியமாகிவிட்டது.

”இனி அதிமுக தொண்டர்கள் தலைமையில் இயங்கும்”

சில எட்டப்பர்கள், அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள், உடைக்க நினைத்தவர்கள், முடக்க நினைத்தவர்கள், திமுகவிற்கு பி டீமாக இருந்து செயல்பட்டவர்கள் முகத்திரை இன்று கிழிக்கப்பட்டுள்ளன. கிட்டட்ட 6 மாதகாலமாக நம் தொண்டர்கள் பட்ட துன்பம் எண்ணில் அடங்காதவை. எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் அதிமுக நான்காக போய்விட்டது, இனி அதிமுகவுக்கு எதிர்காலம் இல்லை என்றெல்லாம் குரல் எழுப்பி வந்தார்கள். ஒட்டுமொத்தமாக உயர்நீதிமன்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு முடிவுக்கட்டிவிட்டது. இனிமேல் அதிமுக தொண்டர்கள் தலைமையில் இயங்கும்.

”மதுரை மண்ணை மிதித்தாலே நல்ல செய்தி கிடைக்கும்”

7 மாதகாலம் எங்கள் கட்சியை வைத்துக் கொண்டே ஊடக நண்பர்கள் தங்கள் பத்திரிகை, ஊடகங்களை நடத்திவிட்டார்கள், எங்களால் உங்களுக்கு வருமானம் கிடைத்து எங்களுக்கு மகிழ்ச்சி, இனியாவது நாட்டு மக்களுக்கு நன்மை செய்யும் இயக்கம் அதிமுக என்பதை எடுத்துச் சொல்லுங்கள்.

மதுரை மண்ணை மிதித்தாலே நல்ல செய்தி, வெற்றி செய்தி அதிமுகவிற்கு கிடைக்கும். திருமங்கலத்தில் அம்மா கோயிலுக்கு வந்த உடனே அனைத்தும் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்ப்பின் மூலம் தெய்வ சக்தி நிரூபிக்கப்பட்டுள்ளது. 

 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்