போலி கோப்பை.. முதல்வர் வரை ஏமாற்றிய மாற்றுத்திறனாளி வீரர் மீது பாய்ந்தது வழக்கு!
Fake Wheelchair cricketer: சக்கர நாற்காலி கிரிக்கெட் அணியின் இந்திய கேப்டன் எனக் கூறி கடையில் வாங்கிய கோப்பையை காட்டி முதல்வர் ஸ்டாலினை ஏமாற்றிய மாற்றுத்திறனாளி வினோத் பாபு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே கீழசெல்வனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத் பாபு. மாற்றுத்திறனாளியான இவர், இந்திய வீல்சேர் கிரிக்கெட் அணியின் கேப்டன் எனக் கூறி வலம் வந்திருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல், கடந்த மாதம் 26-ம் தேதி லண்டனில் மாற்றுத்திறனாளிகளுக்கான வீல்சேர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தனது தலைமையில் இந்திய அணி கலந்துகொண்டதாகவும், அதில் ஆஸ்திரேலியா, வங்காளதேசம், நேபாளம், ஆப்கானிஸ்தான், இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட 20 நாடுகள் பங்கேற்று விளையாடியதாகவும், அதில் இறுதிவரை முன்னேறி இறுதி சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்று வந்திருப்பதாகவும் ஊர் மக்களிடம் கூறியிருக்கிறார். இதை நம்பிய ஊர் மக்களும் வினோத் பாபுவை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினர்.
ட்ரெண்டிங் செய்திகள்
மேலும், அமைச்சர் ராஜகண்ணப்பனையும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறார் வினோத் பாபு. அப்போது, தன்னுடைய தொகுதியைச் சேர்ந்த வினோத் பாபு பாகிஸ்தானைத் தோற்கடித்து இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்திருப்பதாகக் கருதி வினோத் பாபுவை முதல்வரிடம் அழைத்துச் சென்று வாழ்த்து பெற்றிருக்கிறார். அப்போது தனக்கு அரசு வேலை வழங்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்திருக்கிறார். வினோத் பாபு, அமைச்சர் ராஜகண்ணப்பன் இருவரும் முதல்வரை உலகக் கோப்பையுடன் சந்தித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.
இதையடுத்து வினோத் பாபு போலி ஆசாமி என்றும், அவர் சொன்னது எல்லாம் பொய் என்றும் சென்னை தலைமைச் செயலகத்திற்கு புகார் சென்றுள்ளது. இதையடுத்து உளவுத்துறை மூலம் வினோத் பாபுவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் முதல்வர், அமைச்சர் உள்ளிட்டோரை ஏமாற்றி இருப்பதும், அவரிடம் பாஸ்போர்ட்டே இல்லை என்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து வினோத் பாபுவிடம் மேலும் விசாரணை நடத்தியதில், அவர் கொண்டு வந்த கோப்பை, மேற்கு வங்காளத்தில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் விற்பனை செய்யும் கடையில் வாங்கியது என்பதும் தெரிய வந்ததுள்ளது. மேலும், தான் மாற்றுத்திறனாளி கிரிக்கெட்டின் இந்திய அணி கேப்டன் எனவும், உலகக் கோப்பை கிரிக்கெட்டில் விளையாட பாகிஸ்தானுக்குச் செல்ல பண உதவி செய்யுமாறு பல தனியார் நிறுவனங்களிடம் அவர் பணம் வசூலித்திருப்பதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
இந்நிலையில், பேக்கரி உரிமையாளரிடம் ரூ.1 லட்சம் பெற்று ஏமாற்றிய புகாரில் வினோத் பாபு மீது ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலி உலகக்கோப்பையை காட்டி மாற்றுத்திறனாளி ஒருவர் முதல்வர், அமைச்சர் உள்ளிட்டோரை ஏமாற்றி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டாபிக்ஸ்