Tiruvarur: கோயில் திருவிழாவில் ஆபாச நடனம்! 65 வயது முதியவர் உட்பட 3 பேரை தூக்கிய போலீஸ்!
ஆபாச நிகழ்ச்சிகளை நடத்த நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் கோயில்களில் ஆடல் - பாடல் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கடந்த ஜூன் 1ஆம் தேதியன்று தமிழ்நாடு அரசு வெளியிட்டிருந்தது.
திருவாரூர் மாவட்டம் இடும்பாவனம் கிராமத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்றது. கடந்த ஜூன் 24ஆம் தேதி நடைபெற்ற திருவிழாவின் ஒருபகுதியாக இரவு நேரத்தில் ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்த நிகழ்ச்சியில் நீதிமன்ற உத்தரவுகளை மீறி நடனமாடிய பெண்கள் ஆபாச நடனங்களை ஆடியதாக கோவை அம்மன் நகர் போத்தனூர் பகுதியை சேர்ந்த தமிழ்நாடு-புதுச்சேரி நடன கலைஞர் நல சங்க மாநிலத் தலைவர் ராஜசேகரன் என்கிற அஜித்ராஜா என்பவர் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் கோயில் திருவிழாவில் ஆபாச நடன நிகழ்ச்சி நடத்தியது தொடர்பாக இடும்பாவனம் கிராமத்தை சேர்ந்த கிராம நிர்வாகி 65 வயதான கண்ணையன், நெய்விளக்கு கீழ்காடு கிராமத்தை சேர்ந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கோபிநாத், நாமக்கல் மாவட்டம் சிங்களாந்தபுரம் பகுதியை சேர்ந்த ஆபாச நடனம் ஆடிய ரவிக்குமார் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.
ஆடல் பாட நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்
ஆபாச நிகழ்ச்சிகளை நடத்த நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் கோயில்களில் ஆடல் - பாடல் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கடந்த ஜூன் 1ஆம் தேதியன்று தமிழ்நாடு அரசு வெளியிட்டிருந்தது.
அதில் கோயில் விழாக்களில் ஆடல், பாடை நிகழ்ச்சிகளுக்கு மனு அளிக்கப்பட்டால் 7 நாட்களுக்குள் விழாவுக்கு பதில் அளிக்க வேண்டும், கலாச்சார நிகழ்வுகள் மட்டுமே நடத்தப்பட வேண்டும், ஆபாச காட்சிகள், நடனங்கள் இடம்பெறாது என்பதை உறுதி செய்ய வேண்டும், இரவு 10 மணிக்கு மேல் நிகழ்சிகளை நடத்தக்கூடாது. பெண் கலைஞர்களுக்கு இழுக்கு ஏற்படும் வகையில் ஆபாச ஆடைகளில் பெண்கள் இடம்பெறக்கூடாது என்றும் இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.