Murder : கோவில்பட்டியில் பயங்கரம்.. தொழில் போட்டியால் விபரீதம்.. மீன் வியாபாரி உட்பட 2 பேர் கொலை - மூவர் கைது!
Kovilpatti Murder : கோவில்பட்டியில் தொழில் போட்டி காரணமாக மீன் வியாபாரி உட்பட 2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அத்தை கொண்டான் பிரதான சாலை, காந்திநகரைச் சேர்ந்தவர் வெள்ளத்துரை(49). இவர் கோவில்பட்டி ராமசாமி தாஸ் பூங்கா அருகே மீன்கடை நடத்தி வந்தார். இவரது நண்பரான கோவில்பட்டி அருகே கீழ பாண்டவர்மங்கலத்தைச் சேர்ந்த அருணாச்சலம் மகன் மகாராஜா என்ற டீலக்ஸ் ராஜா (55) வெள்ளத்துரையின் கடையில் உதவிகளை செய்து வந்தார்.
சரமாரியாக அரிவாளால் தாக்கி கொலை
வெள்ளத்துரை, அவரது நண்பரான மகாராஜா ஆகிய 2 பேரும் வியாழக்கிழமை இரவு கடையில் தூங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை சுமார் 1:30 மணிக்கு கடைக்குள் புகுந்த மர்ம கும்பல், வெள்ளத்துரையையும், மகாராஜாவையும் சரமாரியாக அரிவாளால் தாக்கி கொலை செய்து தப்பி ஓடிவிட்டனர்.
இதனையடுத்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வெள்ளத்துரையை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே வெள்ளத்துரை உயிரிழந்தார். மகாராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.