Rishabh Pant: இந்த 2 பேருக்கு நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்: ரிஷப் பண்ட்!
கார் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றுவரும் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் ரிஷப் பண்டை அவரது தாயார் சரோஜ், சகோதரி சாஷி ஆகியோர் உடனிருந்து கவனித்து வருகிறார்கள்.
இந்நிலையில் அவர் டுவிட்டரில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். விபத்தில் சிக்கிய பிறகு முதல் முறையாக அவர் இந்தப் பதிவை வெளியிட்டார்.
ட்ரெண்டிங் செய்திகள்
அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
எனக்கு ஆதரவாக இருந்து நான் மீண்டு வர வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி. எனக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்ததை உங்களுக்கு அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மீண்டு வருவதற்கான முயற்சிகள் தொடங்கிவிட்டன. வரவிருக்கும் சவால்களுக்கு நான் தயாராக இருக்கிறேன். பிசிசிஐ நிர்வாகத்திற்கும், பிசிசிஐ கெளரவச் செயலர் ஜெய் ஷாவுக்கும், ஆதரவாக இருந்த அரசு அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன். எனக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவ குழுவினருக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில், " ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக என்னால் நன்றி சொல்ல முடியாமல் போயிருக்கலாம். ஆனால் எனது விபத்தின் போது எனக்கு உதவிய இந்த இரண்டு ஹீரோக்களுக்கும் நான் நிச்சயம் நன்றி கூற வேண்டும். என்னை மருத்துவமனைக்கு செல்ல உதவிய ரஜத் குமார் மற்றும் நிஷு குமாருக்கு என்னென்றும் நன்றிக்கடன் பட்டிருப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார் ரிஷப் பண்ட்.
ரிஷப் பண்ட் மீண்டும் உடல்நலம் தேறி தாய்நாட்டுக்கு விளையாட வர வேண்டும் என்று ரசிகர்கள் கமெண்ட் செக்ஷனில் வாழ்த்து கூறி வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் வீரரும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் கடந்த மாதம் 30-ஆம் தேதி கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். டெல்லியில் இருந்து தனது மெர்சிடஸ் சிஎல்இ காரை ஓட்டிக் கொண்டு உத்தராகண்டிற்குச் சென்றபோது ரூர்கி அருகே அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி சாலைத் தடுப்பில் மோதித் தீப்பிடித்து எரிந்தது.
எரியும் காரில் இருந்து முன்பக்க கண்ணாடியை உடைத்துத் தீக்காயங்களுடன் தப்பியுள்ளார். இதில், ரிஷப் பண்டுக்கு தலை, கால்கள் மற்றும் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது.
இந்த விபத்தை நேரில் கண்ட ஹரியாணா அரசுப் பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் ரிஷப் பண்டை மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் ரூர்கி பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக உத்தராகண்டில் உள்ள மாக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவிப்பின்படி அரசு செலவில் அவருக்கு உயர்மட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது அவர் மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
டாபிக்ஸ்