Ind vs Aus Test Series: முதல் டெஸ்ட்! காயத்தால் விலகிய இரு அணி வீரர்கள் விவரம்
டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்னர் வீரர்கள் காயம் பிரச்னை தலைதூக்கியுள்ளது. ஆஸ்திரேலியா நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் காயம் காரணமாக விலகியுள்ள நிலையில், தற்போது இந்திய வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து காயத்தால் விலகியுள்ளார்.
இந்த ஆண்டில் நடைபெற்ற இலங்கை, நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 தொடரை இந்தியா வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் ஆகியவற்றில் பங்கேற்கிறது.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் நாக்பூரில் பிப்ரவரி 9ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா அணியினர் இந்தியா வந்தடைந்துள்ளனர். பெங்களூருவில் அவர்கள் நான்கு நாள்கள் பயிற்சி மேற்கொள்ளவுள்ளனர்.
இதற்கிடையே விரலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு வருவதால் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுவதாக ஆஸ்திரேலியா நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தெரிவித்தார்.
இதையடுத்து தற்போது இந்திய அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் ஐயருக்கு முதுகில் ஏற்பட்ட காயம் முழுமையாக குணமடையாத நிலையில் அவர் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் கிரிக்கெட் விளையாட குறைந்தது இரண்டு வாரங்களாவது ஆகும் என்பதால், நிச்சயமாக முதல் டெஸ்ட்டில் விளையாட முடியாது. இரண்டாவது டெஸ்டில் அவர் இடம் பெறுவது அவரது உடற்தகுதி அறிக்கைக்கு உட்பட்டது என்று கூறப்படுகிறது.
ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடபட்சத்தில் அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் அல்லது சுப்மன் கில் ஆகியோரில் ஒருவர் களமிறக்கப்படுவார் என தெரிகிறது. சூர்யாகுமார் யாதவ் களமிறங்கும் பட்சத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் அவருக்கு அறிமுக போட்டியாக அமையும்.
டாபிக்ஸ்