தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Manipur Violence: மணிப்பூரில் மீண்டும் பயங்கரம்: குக்கி தீவிரவாதிகள் தாக்குதல்.. 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம்

Manipur Violence: மணிப்பூரில் மீண்டும் பயங்கரம்: குக்கி தீவிரவாதிகள் தாக்குதல்.. 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம்

Marimuthu M HT Tamil
Apr 27, 2024 11:51 AM IST

Manipur Violence: குக்கி தீவிரவாதிகள் தாக்குதலில் 128 பட்டாலியனைச் சேர்ந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் இருவர் உயிரிழந்தனர்.

மணிப்பூர்: ஏப்ரல் 24அன்று மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் மேம்படுத்தப்பட்ட வெடிபொருளான (IED) வெடிப்பால், சேதமடைந்த தேசிய நெடுஞ்சாலை 2இன் பாலத்தில் காவலர்கள் குவிக்கப்பட்ட காட்சி.
மணிப்பூர்: ஏப்ரல் 24அன்று மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் மேம்படுத்தப்பட்ட வெடிபொருளான (IED) வெடிப்பால், சேதமடைந்த தேசிய நெடுஞ்சாலை 2இன் பாலத்தில் காவலர்கள் குவிக்கப்பட்ட காட்சி. (ANI Pic Service)

ட்ரெண்டிங் செய்திகள்

நள்ளிரவு தொடங்கி அதிகாலை 2:15 மணி வரை குக்கி தீவிரவாதிகளால், சிஆர்பிஎஃப் வீரர்கள் தாக்கப்பட்டதாக மணிப்பூர் போலீசார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.

உயிரிழந்த வீரர்கள், மணிப்பூர் மாநிலத்தின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள நாரன்சேனா பகுதியில் நிறுத்தப்பட்ட சிஆர்பிஎஃப் 128ஆவது பட்டாலியனைச் சேர்ந்தவர்கள்.

"சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் தங்கியிருக்கும் முகாமை குறிவைத்து மலை உச்சியில் இருந்து குக்கி தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். நள்ளிரவு 12.30 மணியளவில் தொடங்கிய இந்தத் துப்பாக்கிச்சூடு போராட்டம் அதிகாலை 2.15 மணி வரை நீடித்தது. தீவிரவாதிகள் வெடிகுண்டுகளையும் வீசினர். அவற்றில் ஒன்று சிஆர்பிஎஃப்பின் 128 பட்டாலியனின் புறக்காவல் நிலையத்தில் வெடித்தது" என்று மூத்த போலீஸ் அலுவலர் ஒருவர் கூறினார்.

கடந்த 2023ஆம் ஆண்டு, மே மாதம் முதல் மணிப்பூரில் இம்பால் பள்ளத்தாக்கை தளமாகக் கொண்ட மெய்தேயிஸ் மற்றும் அருகிலுள்ள மலைகளை அடிப்படையாகக் கொண்ட குக்கிஸ் இனக்குழுக்கள் இடையே நடந்த இனக் கலவரத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் வீடு இல்லாமல் ஆக்கப்பட்டனர். 

கடந்த வாரம், இன வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை 2-ல் உள்ள ஒரு பாலம், ஐ.இ.டி குண்டுவெடிப்பில் ஓரளவு சேதமடைந்தது.

இன வன்முறையால், இம்பால் மேற்கு மாவட்டத்தில் மெய்தேயிஸ் மற்றும் குக்கிஸ் என சண்டையிடும் இரண்டு சமூகங்களின் கிராம தன்னார்வலர்களிடையே துப்பாக்கிச் சண்டை வெடித்தது. பின் சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஐஇடி குண்டு வெடித்தது.

மணிப்பூரில், மக்களவைத் தேர்தல் நடைபெற்ற நாளில் குக்கிகள் தாக்கப்பட்டனர்.  மணிப்பூரின் 8 மாவட்டங்களில் உள்ள 13 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 857 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மணிப்பூரில் மாலை 5 மணி நிலவரப்படி 76.06% வாக்குகள் பதிவாகியுள்ளன.

அவுட்டர் மணிப்பூர் மக்களவைத் தொகுதியின் பதினைந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் உள் மணிப்பூர் தொகுதிக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

அவுட்டர் மணிப்பூரில் என்.பி.எஃப்(Naga People's Front) கட்சியின் வேட்பாளர் கே.திமோதி ஜிமிக், காங்கிரஸின் வேட்பாளர் ஆல்பிரட் கங்கம் ஆர்தர் மற்றும் சுயேச்சைகள் எஸ்.கோ ஜான் மற்றும் அலிசன் அபோன்மாய் ஆகிய நான்கு வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பாஜக எந்த வேட்பாளரையும் நிறுத்தவில்லை. அதற்குப் பதிலாக, அதன் கூட்டணி கட்சியான நாகா மக்கள் முன்னணியை (என்.பி.எஃப்) ஆதரிக்கிறது.

2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், என்பிஎஃப் எனப்படும், நாகா மக்கள் முன்னணியினர் 73 ஆயிரத்து 782 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவை தோற்கடித்து வெற்றி பெற்றது. ஆனால் தற்போதைய தேர்தலில் பாஜக, நாகா மக்கள் முன்னணிக்கு ஆதரவளித்தது குறிப்பிடத்தக்கது. 

மணிப்பூர் வன்முறைக்குக் காரணம் என்ன?: மணிப்பூரில் ’குக்கி’ என்ற மலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினத்தவருக்கும், ’மெய்டீஸ்’ என்ற பழங்குடியினர் இல்லாதவருக்கும் பிரச்னை இருந்து வருகிறது. இதற்குக் காரணம், மெய்டீஸ் என்ற மக்கள தங்களை பழங்குடியினராக அறிவிக்கக் கோருகின்றனர். அவ்வாறு அறிவித்தால் தங்களின் சலுகைகள் பறிக்கப்படும் என அஞ்சுகின்றனர், குக்கிகள். இதில் மெய்டீஸ் மக்கள் இந்துக்களாகவும், குக்கி மக்களில் பெரும்பாலானோர் கிறிஸ்தவர்களாகவும் இருந்து வருகின்றனர்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்