Chandrababu Naidu : சிஐடி அதிகாரிகள் விசாரணை முடிந்தது.. சந்திரபாபு நாயுடுவுக்கு காவல் நீட்டிப்பு!
ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் கைதான சந்திரபாபு நாயுடுக்கு அக்டோபர் 5ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து விஜயவாடா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆந்திராவில் கடந்த 2015 முதல் 2019 வரை தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தார். அப்போது, 10 சதவீத மாநில அரசு நிதி பங்களிப்பும், 90 சதவீத தனியார் பங்களிப்புடன் திறன் மேம்பாட்டு வாரியத்தில் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது.
ட்ரெண்டிங் செய்திகள்
இதில், தனியார் நிறுவனங்களை அனுமதிப்பதற்காக ரூ.371 கோடி ரூபாய் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டதாக 2021-ல் மாநில ஊழல் தடுப்பு பிரிவு சார்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக சந்திரபாபு நாயுடு அண்மையில் கைது செய்யப்பட்டு ராஜமஹேந்திவரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் அவரை சிஐடி போலீசார் ஆஜர்படுத்தினர். அவரை 14 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரின் காவல் நிறைவடைந்த பின்னர் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். சிஐடி அதிகாரிகளின் மனுதாக்கலின்படி அவரை 2 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதைத்தொடர்ந்து நேற்று 2ஆவது நாளாக ராஜமுந்திரி சிறையில் வைத்து சிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணை அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கு பின்னர் வீடியோ கால் அழைப்பு மூலம் விஜயவாடா நீதிபதி முன்பு சந்திரபாபு நாயுடு ஆஜர்படுத்தப்பட்டார். இந்தநிலையில் ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் கைதான சந்திரபாபு நாயுடுக்கு அக்டோபர் 5ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து விஜயவாடா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்