Vijay Naa Ready: விஜய் மீது புகார் கொடுத்தவருக்கு தொடர் கொலை மிரட்டல்! -போலீசில் புகார் அளிக்கப்போவதாக எச்சரிக்கை!
லியோ படத்தில் இடம் பெற்ற நா ரெடி பாடலில் நடித்தற்காக நடிகர் விஜய் மீது புகார் அளித்த நபருக்கு விஜய் ரசிகர்கள் கொலை மிரட்டல் விடுத்திருக்கின்றனர்.
நடிகர் விஜய் தனது 49 ஆவது பிறந்தநாளை ஜூன் 22 ஆம் தேதி கொண்டாடினார். இதனை முன்னிட்டு அவருக்கு பரிசு கொடுக்கும் விதமாக லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் 12 மணிக்கு வெளியானது. அதே போல் படத்தின் முதல் பாடலான நா ரெடி பாடலும் அன்று மாலை வெளியானது.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்த பாடலை நடிகர் விஜய் தனது குரலில் பாடி இருந்தார். இரண்டுமே விஜய் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இன்னொரு பக்கம் நா ரெடி பாடலில் நடிகர் விஜய் சிகரெட்டுடன் நடனமாடியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பாமக தலைவர் அன்புமணி உட்பட பல சமூக ஆர்வலகர்கள் சமூகவலைதளங்களில் விஜயை கண்டித்திருந்தனர்.
விஜய் மீது புகார்
இந்த நிலையில் லியோ படத்தின் நா ரெடி பாடல் ரவுடிசத்தை உருவாக்கும் வகையில் இருப்பதாகக் கூறி நடிகர் விஜய் மீதுசென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆர்டிஐ செல்வம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் புகார் அளித்தார்.
அந்த புகார் மனுவில், இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் புழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் லியோ பாடல் இருக்கிறது. அதனால் லியோ படத்தின் நா ரெடி பாடலை தடை செய்ய வேண்டும். போதைப்பொருள் புழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும், ரவுடிசத்தை உருவாக்கும் வகையிலும் பாடல் உருவாக்கப்பட்டு உள்ளது.
அதனால் நடிகர் விஜய் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தி இருந்தார். மேலும் நீதிமன்றம் மூலமாகவும் மனு அளிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.
கொலை மிரட்டல்
அந்த புகாரில், “கடந்த சில நாட்களாகவே போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை காவல்துறை அதிகாரிகள் சென்னை முழுவதும் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சமயத்தில் இந்த பாடல் தற்போது வைரலாகி போதைப்பொருள் பொருட்களை உபயோகிக்கும் வகையில் இளைஞர் தூண்டும் விதமாக அமைந்திருக்கிறது.
ஆகையால் நடிகர் விஜய் மீது போதை பொருள் தடுப்பு சட்ட பிரிவின் படி நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமல்லாமல் அந்தப்பாடலை இயக்கிய நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் நடிகர் விஜயின் பனையூர் முகவரி மற்றும் சாலிகிராமம் முகவரிக்கு ஆர்.டி.ஐ.செல்வம் சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது.
ஆனலைன் மூலமாக சென்னை காவல் ஆணையத்தில் புகார் அனுப்பியதை தெரிந்து கொண்ட விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட நபர்கள் தொலைப்பேசியில் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், இது குறித்து போலீஸில் புகார் அளிக்க இருப்பதாகவும் செல்வம் கூறியிருக்கிறார்.
முன்னதாக, நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’. இந்தப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்து வருகிறார். கிட்டத்தட்ட 14 வருடங்களுக்குப் பிறகு இந்த ஜோடி மீண்டும் இந்தப் படத்தில் இணைந்து இருக்கிறது.
இவர்களுடன் இயக்குநர்கள் கெளதம் மேனன், மிஷ்கின், நடிகர் அர்ஜூன், நடிகர் சஞ்சய் தத், நடன இயக்குநர் சாண்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைக்கும் இந்தப்படத்திற்கு முன்னதாக விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அண்மையில் இந்தப்படத்தில் கிறிஸ்டோபர் நோலன் படத்தில் நடித்த நடிகர் டென்சில் ஸ்மித் இணைந்ததாகவும் கூறப்பட்டது.
டாபிக்ஸ்