Actor Marimuthu: ‘அஜித் இறுக்கமாகிவிட்டார்’ நெருங்கிய நண்பர் மாரிமுத்து பேட்டி!
‘நான் பணம் கட்ட பள்ளிக்கு போவேன், அஜித் அலுவலகத்திலிருந்து பணம் கட்டிவிட்டார்கள் என்று கூறுவார்கள். எப்படி அவருக்கு நன்றி சொல்வது என்றே தெரியவில்லை’ - மாரிமுத்து
உதவி இயக்குனராக, இயக்குனராக, நடிகராக வெள்ளித்திரை , சின்னத்திரை என அனைத்திலும் கலக்கிக்கொண்டிருக்கும் மாரிமுத்து, 90களில் உதவி இயக்குனராக இருந்த போது, நடிகர் அஜித் உடன் நிறைய படங்களில் பணியாற்றியவர். அவருடன் நெருங்கி பழகியவர். அப்போது அவருக்கும் அஜித்திற்கும் இருந்த நெருக்கத்தை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். இதோ அந்த பேட்டி:
ட்ரெண்டிங் செய்திகள்
‘‘அஜித் எனக்கு ரொம்ப பெரிய உதவியை செய்தார். அவர் என் மீது ரொம்ப ப்ரியமா இருப்பாரு. இப்போ தான் தொடர்பு இல்லாமல் இருக்கிறது. கொஞ்சம் தூரமாயிடுச்சு. அடுத்த படம் அவருடன் தான் நடிக்கப் போகிறேன். அப்போது எல்லாத்தையும் அவருடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.
ஆசை, வாலி சமயத்தில் அவருடன் பணியாற்றும் போது, ரொம்ப ப்ரியமா இருப்பாரு. என் பைக்கில் அவரை அழைத்துச் செல்வேன். அவரது பைக்கில் என்னை அழைத்துச் செல்வார். ரொம்ப சிம்பிளான ஆளு.
ஆசை படப்பிடிப்பின் போது ஹெல்மெட் போட்டு பைக்கில் தான் படப்பிடிப்புக்கு வருவார். அந்த சமயத்தில் தான் என் மகன் பிறந்தான். அவன் வளரும் போது, அஜித்தோடு வாலி படம் பண்ணிட்டு இருந்தோம்.
என் மகனை நல்ல பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பது என் ஆசை. பிரபல பள்ளி ஒன்றில் சேர்க்க வேண்டும் என்று விரும்பினேன். நல்லா படிக்க வைக்க வேண்டும் என்று விரும்பினேன். அந்த பள்ளியில் அப்போது அனுமதி கட்டணமாக குறிப்பிட்ட தொகை கட்ட வேண்டும். என்னிடம் பணம் இல்லை. அஜித்திடம் அதை பகிர்ந்தேன்.
உடனே மேலாளரை அனுப்பி, பணத்தை கட்டி அவனை பள்ளியில் சேர்க்கச் சொன்னார். அதுக்கு அப்புறம் எதுவே நான் கேட்கவில்லை. அடுத்து 8 வருடத்திற்கு அவர் தான் கல்வி கட்டணம் செலுத்தினார்.
நான் பணம் கட்ட பள்ளிக்கு போவேன், அஜித் அலுவலகத்திலிருந்து பணம் கட்டிவிட்டார்கள் என்று கூறுவார்கள். எப்படி அவருக்கு நன்றி சொல்வது என்றே தெரியவில்லை.
அதன் பிறகு அவரை சந்தித்துக் கொண்டு தான் இருந்தேன். வீரம் படத்திற்குப் பிறகு தான் அவரை சந்திக்க முடியவில்லை. அவரோட லைப் ஸ்டைல் மாறிவிட்டது. அவர் நிறைய துரோகத்தை சந்தித்து, இறுகிய மனிதராகிட்டார்.
தன் குடும்பம், தன் மனைவி, குழந்தைகள் என வாழ்க்கையை அமைத்துவிட்டார். ஆனால், ட்ரஸ்ட் ஒன்றை ஆரம்பித்து பெரிய அளவில் செய்துகொண்டிருக்கிறார் என நினைக்கிறேன். ஆனால் அதை அவர் விளம்பரப்படுத்தியதாக தெரியவில்லை.
அவர் வீட்டில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் வீடு வாங்கி கொடுத்திருக்கிறர். பெரிய முடிவுகளை கூட யோசிக்காமல் உடனே எடுத்துவிடுவார். நாளை பார்க்கலாம், நாளை மறுநாள் பார்க்கலாம் என்று நினைக்கிற ஆள் இல்லை. தோன்றியதை உடனே செய்துவிடுவார்.
ஒரு இயக்குனர் வேண்டாம், வேண்டும் என்பதை அந்த செகண்டில் முடிவு எடுப்பார். கொஞ்சம் முன் கோபி. கோபம் வந்தால் அவரை எதிர்கொள்ளவே முடியாது. அவரது ஈகை குணம் தான், அவரை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது,’’
என்று அந்த பேட்டியில் மாரிமுத்து நெகிழ்ச்சியுடன் கூறியிருந்தார்.
டாபிக்ஸ்