எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இப்படத்தின் மவுசு குறையாது.. நகைச்சுவையில் அசத்திய ரஜினி.. 43ம் ஆண்டில் தில்லு முல்லு!
43 Years Of Thillu Mullu : ரஜினி-தேங்காய் சீனிவாசன் காம்போ அவ்வளவு சிறப்பாக அமைந்திருக்கும். பின்னாலில் ரசிகர்கள் இவர்களது காம்போ வராதா என எதிர்பார்க்கும் அளவிற்கு அவர்களின் நடிப்பு அவ்வளவு அற்புதமாக இந்த படத்தில் அமைந்திருந்தது. இந்த படம் வெளியாகி இன்றுடன் 43 ஆண்டுகள் ஆகிறது.

இந்தியில் சூப்பர் ஹிட் படமான கோல்மால் படத்தின் ரீமேக் தான் தில்லு முல்லு. இந்தப் படத்தை தமிழில் கே பாலச்சந்தர் இயக்கியிருப்பார். தமிழில் சிறந்த காமெடி படங்களில் டாப் 10 லிஸ்டில் இந்த தில்லு முல்லு படம் கண்டிப்பாக இருக்கும். ரஜினியை நகைச்சுவை நாயகனாக மாற்றி மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த படம் இந்த தில்லு முல்லு.
இந்தப் படத்தை தமிழுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து அதனை வெற்றி அடைய செய்துதிருப்பார் இயக்குனர் பாலச்சந்தர். இந்தப் படத்தை தமிழுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்ததில் பாலச்சந்தர் உதவியாளர் ஆனந்து, வசனகர்த்தாவான மறைந்த இயக்குனர் விசுவின் பணி அளப்பரியது என்றே சொல்லலாம். லீவுக்காக பொய் சொல்லி அந்த பொய்யை உண்மையாக்க மேலும் பல பொய்களை அடுக்கிக்கொண்டு அதனை நகைச்சுவை கலந்து கலகலப்பாக கொடுத்திருப்பார் பாலச்சந்தர். இப்படத்தில் குறிப்பாக வசனம் அவ்வளவு அருமையாக அமைந்திருக்கும்.
இப்படத்தில் தேங்காய் சீனிவாசனை நம்ப வைத்து தில்லுமுல்லு செய்யும் ரஜினியின் காட்சி வயிறு குலுங்கு குலுங்க சிரிக்க வைக்கும். குறிப்பாக மீசை வைத்தால் சந்திரன், மீசை இல்லை என்றால் இந்திரன் என தேங்காய் சீனிவாசனை முட்டாளாக்கும் விதமாக ரஜினி செய்யும் இந்த தில்லுமுல்லு காரியம் பார்ப்போரை சிரிப்பலையில் ஆழ்த்தும். குறிப்பாக ரஜினியை தேங்காய் சீனிவாசன் இன்டர்வியூ செய்யும் போது வரும் காட்சி, அதில் உங்கள் பெயர் என்ன என தேங்காய் சீனிவாசன் கேட்கும்போது அதற்கு ரஜினி அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன் என கூறும் தோனியும், அதேபோல தேங்காய் சீனிவாசன் உங்கள் பெயரை யார் கேட்டாலும் இப்படி தான் சொல்வீர்களா என கேட்கும் தோனியும் அவ்வளவு அருமையாக அமைந்திருக்கும்.