NanditaDas:‘கடைக்கு போனா வெள்ளையாவதற்கு க்ரீமை நீட்டுறாங்க’ - ‘அழகி’ நந்திதா!
கடைகளுக்குச் சென்றால் என்னை பார்க்கும் நபர்கள் வெள்ளையாவதற்கு க்ரீம்களை எடுத்து நீட்டுவதாக நடிகை நந்திதா தாஸ் வேதனை தெரிவித்து இருக்கிறார்
மணிரத்னம் இயக்கிய ‘கன்னத்தில் முத்தமிட்டாள்’ தங்கர்பச்சான் இயக்கிய ‘அழகி’ , ‘விஷ்வா துளசி’ ‘நீர்பறவை’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நந்திதா தாஸ். தமிழ் மட்டுமல்லாது இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் மராத்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் இவர்,கடந்த 2008 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தை பின்னணியாக கொண்டு ஃபிராக் என்ற படத்தை இயக்கினார்.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்தப்படம் உலகளவில் கவனம் பெற்றது. டெல்லி பல்கலைக்கழகத்தில் சமூகப்பணியில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் குழந்தைகள் உரிமைகள், எச்.ஐ.வி/எய்ட்ஸ் விழிப்புணர்வு, பெண்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருதல் உள்ளிட்டவற்றிற்காக குரல் கொடுத்து வருகிறார்.
இது மட்டுமன்றி தோல்நிற பாகுபாட்டிற்கு எதிராக ‘கறுப்பு அழகானது’ என்ற பிரசாரத்தையும் முன்னெடுத்து இருக்கிறார். இவரது இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஸ்விகாடோ’ திரைப்படம் வருகிற மார்ச் 17 -2023 அன்று வெளியாக இருக்கிறது. இந்தப்படம் தொடர்பாக அண்மையில் அவர் பிங்க் வில்லா யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் நிறபாகுபாடு குறித்தும் அதை தான் எப்படி எதிர்கொள்கிறேன் என்பது குறித்தும் பேசியிருக்கிறார்.
இது குறித்து பேசிய நந்திதா தாஸ், “ கல்லூரிகளுக்கு செல்லும் போது இதை நான் பலமுறை எதிர்கொண்டிருக்கிறேன். அப்போது பெண் பிள்ளைகள் என்னிடம் தங்களிடம் இருக்கும் இந்த கறுப்பு நிறத்தை வைத்துக்கொண்டு நாங்கள் எப்படி தன்னபிக்கையோடு இருப்பது என்று கேட்டனர். நான் அதை ஆச்சரியமோடு பார்த்தேன். ஏனென்றால் நான் அதை பற்றி நினைக்கவே இல்லை. காரணம் நான் அது போன்ற நெருக்கடிக்குள் வளரவில்லை.
என்னுடைய பெற்றோரும் என் தலையில் அதனை புகுத்தவில்லை. ஆனால் கடைகளில் நான் அழகு சாதன பொருட்களிடம் செல்லும் போது உடனே அங்கிருக்கும் கடை ஊழியர்கள் நான் வெள்ளை ஆவதற்கு பயன்படும் என்று கூறி க்ரீம்களை எடுத்து நீட்டுவர். நான் அவர்களிடம் இந்த உடம்பிலேயே பிறந்தேன்; இந்த உடம்பிலேயே இறப்பேன். ஆகையால் என்னை வெள்ளையாக்கும் எதையும் எனக்கு தயவு செய்து தர வேண்டாம் என்று கூறினேன்” என்று பேசினார்.
டாபிக்ஸ்