'கங்குவாவ பாத்து மக்கள் எல்லாம் சிலிர்த்துப் போயிட்டாங்க.. மக்களின் ரசனைய நிரூபிச்சிட்டாங்க' .. ஞானவேல் ராஜா ஓபன் டாக்
கங்குவா திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் வரும் கெஸ்ட் ரோலை நாங்கள் மறைத்து வைத்திருந்ததால் தான் அதைப் பார்த்து மக்கள் சிலிர்த்துப் போயுள்ளனர் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியுள்ளார்.

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கங்குவா'. சிறுத்தை சிவா 350 கோடி ரூபாய் பொருட் செலவில் பிரம்மாண்ட ஆக்ஷன் கலந்த பேன்டஸி திரைப்படமாக இதை எடுத்துள்ளார். இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி மற்றும் பாபி தியோல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் சார்பில் ஞானவேல் ராஜா, வம்சி, பிரமோத் ஆகியோர் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளனர்.
கங்குவா வெற்றி
'கங்குவா' படம் நவம்பர் 14ம் தேதி உலகம் முழுவதும் 11,500 தியேட்டர்களில் வெளியாகி கலவையான வரவேற்பை பெற்றது. இந்நிலையில், 'கங்குவா' படத்தின் வெற்றி குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெலுங்கு செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அதில், கங்குவா படம் வெற்றி குறித்த சுவாரஸ்யமான சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
தெலுங்கு மக்களின் ரசனை நிரூபனமானது
'கங்குவா' படத்திற்காக நாங்கள் மூன்று வருட கடின உழைப்பை கொடுத்துள்ளோம். அதன் விளைவாகவே இந்த படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. நல்ல படங்களை ஆதரிப்பதில் தெலுங்கு ரசிகர்கள் ரசனை உள்ளவர்கள் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. 'கங்குவா' படம் தமிழை விட தெலுங்கில் வசூலை குவித்து வருகிறது. தெலுங்கில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் ஹவுஸ்ஃபுல்லாகவே உள்ளன. அவர்கள் மீண்டும் மீண்டும் படத்தைப் பார்க்க தியேட்டர்களுக்கு வருகின்றனர்.