தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  August 16, 1947: ஆகஸ்ட் 16, 1947 படம் எப்படி இருக்கிறது? சுடச்சுட விமர்சனம் இதோ!

August 16, 1947: ஆகஸ்ட் 16, 1947 படம் எப்படி இருக்கிறது? சுடச்சுட விமர்சனம் இதோ!

Kalyani Pandiyan S HT Tamil
Apr 07, 2023 11:33 AM IST

August 16 1947 Movie Review: கெளதம் கார்த்திக்கின் நடிப்பில் மிரட்டலாக வெளிவந்துள்ள 'ஆகஸ்ட் 16, 1947' திரைப்படத்தின் திரை விமர்சனம் குறித்துப் பார்ப்போம்.

ஆகஸ்ட் 16, 1947 திரைப்பட போஸ்டர்
ஆகஸ்ட் 16, 1947 திரைப்பட போஸ்டர்

ட்ரெண்டிங் செய்திகள்

கதையின் கரு: 

சுதந்திரத்திற்கு முன்னதான காலம் அது; பஞ்சு தயாரித்தலுக்கு பேர் போன செங்காடு என்ற கிராமம், வெள்ளைக்காரத்துரை ராபர்ட்டின் கீழ் இயங்குகிறது. ஆங்கில அரசுக்கு அதிக விசுவாசமாக இருக்கும் துரை,அரசுக்கு அதிக லாபம் கொடுக்க வேண்டும் என்பதற்காக மக்களை தண்ணீர் கூட கொடுக்காமல் மணிக்கணக்கில் வேலை வாங்கி பிழிகிறார். 

இதனை தட்டிக்கேட்டாலோ, அல்லது எதிர்த்து நின்றாலோ அவர்களுக்கு கொடூர தண்டனைகளை விதிக்கப்படுகிறது; இது போதாது என்று ராபர்ட் மகன் ஜஸ்டின் கொடுக்கும் காம தொல்லைகள் வேறு. 

இப்படி விடுதலை என்ற சுதந்திரக்காற்றுக்காக ஒவ்வொரு நாளையும் ரணவேதனைகளுடன் மக்கள் கடத்திக்கொண்டிருக்கும் சமயத்தில்தான், இந்தியாவிற்கு விடுதலை அறிவிக்கப்படுகிறது. இதனை ராபர்ட் மக்களிடம் இருந்து மறைக்கிறார். 

இதற்கிடையே, இந்தியாவிற்கு விடுதலை கிடைத்த பின்னரும் செங்காட்டு பஞ்சில் இருந்து லாபம் கிடைக்க ஆங்கிலேயே அரசு திட்டம் ஒன்றை தீட்டுகிறது. அந்தத் திட்டம் என்ன?.. சுதந்திரம் கிடைத்ததை மக்களிடம் இருந்து ராபர்ட் மறைத்ததிற்கான காரணம் என்ன? உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்களே ஆகஸ்ட் 16 1947 படத்தின் கதை!

1940 களின் காலக்கட்டத்தை தன்னுடைய கலை இயக்கத்தின் மூலம் கண்முன் நிறுத்தி இருக்கிறார் கலை இயக்குநர் சந்தானம். கெளதம் கார்த்திக் இன்னும் கொஞ்சம் நன்றாக நடித்திருக்கலாம். ஆனால் அதற்கெல்லாம் சேர்த்து புகழ் நடித்துவிட்டார். ஆம் கிடைத்த வாய்ப்பை கனகச்சிதமாக பயன்படுத்தி புகழ் வெளிப்படுத்தியிருக்கும் நடிப்பு அசத்தல். 

கதாநாயகியாக வரும் ரேவதி ஷர்மாவின் நடிப்பு ஓகே. ரிச்சர்ட் அஸ்டனின் வில்லத்தனம் மிரட்டல். இவர்களெல்லாம் தாண்டி படத்தில் நடித்திருக்கும் ஜூனியர் ஆர்ட்டிஸ்களின் நடிப்பிலும் அவ்வளவு உண்மைத்தன்மையை உணரமுடிகிறது.

அறிமுக இயக்குநர் பொன்குமார் 1940 களில் நடக்கும் கதையை நம்பும்படியாக திரையில் காண்பித்து இருக்கிறார். ஆரம்பத்தில் கதையை சொல்ல பயன்படுத்திய அனிமேஷன் உத்தி சிறப்புஅந்த காலகட்டத்திற்கு தேவையான நடிகர்களையும், கதாபாத்திரங்களில் ஒன்ற வைத்திருந்தது நன்றாக இருந்தது. 

முதல் பாதியில் கலகலவென செல்லும் படத்தின் திரைக்கதை, கெளதம் கார்த்திக்கின் காதலிற்குள் நுழையும் போது பொங்கி அமரும் பால் போல சுணங்கி விடுகிறது. அந்தச் சுணக்கம் முதல் பாதியின் முந்தையக்காட்சி வரை தொடர்ந்தது படத்தின் பலவீனம். 

ஆனால் அதனை இரண்டாம் பாதியில் ஓரளவு மீட்டு இருக்கிறார் பொன்குமார். குறிப்பாக ஜமீன் பரம்பரையின் அரசியல், அவர்கள் ஆங்கிலேயர்கள் காலக்கட்டத்தில் மக்களிடம் நடந்து விதம் ஆகியவற்றை அப்படியே காட்சிப்படுத்தி இருந்தது கவனிக்கும் விஷயமாக இருந்தது. படத்தில் இருக்கும் அனைத்து குறைகளையும் அனுசரித்து நம்மை பார்க்க வைத்தது 1940 காலக்கட்டத்தில் கதையை அமைத்தது. 

ஷான் ரோல்டனின் பாடல்கள் எதுவும் எடுபடவில்லை; பின்னணி இசையிலும் பெரிதான புதுமை இல்லை. செல்வகுமாரின் கேமராவும் முடிந்தவரை சுற்றி சுழன்று இருக்கிறது. ஆக மொத்ததில் ஆபாசமில்லாத ஒரு பிரீயாடிக் ட்ராமைவை பார்க்க வேண்டும் என்றால் 1947 படத்திற்கு செல்லலாம்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்