அசால்டான ஹீரோ.. அறிவில்லாத ஹீரோயின்.. 3 ஆண்டுகளை நிறைவு செய்த 'கடத்தல் மன்னன்' நெல்சனின் டாக்டர்
கடத்தல் கதையை மையப்படுத்தி, அசாத்திய காமெடி வசனங்களால் மக்களை ஈர்த்த நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் நெல்சனின் டாக்டர் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 3 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

டாக்டர் திரைப்படம் சரியாக 3 ஆண்டுகளுக்கு முன் இதே அக்டோபர் 9ம் நாள் உலகம் முழுவதும் வெளியானது. நடிகர் சிவகார்த்திகேயனனின் முந்தைய படங்கள் சில சறுக்கல்களை தந்ததால், எப்படியாவது ஒரு வெற்றிப் படத்தை மக்களிடம் கொடுத்தே ஆகவேண்டும் என்ற முனைப்பில் இருந்தபோது வெளியான படம் டாக்டர்.
கோலமாவு கோகிலா திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான நெல்சன் இப்படத்தை இயக்கி இருந்தார். இவர் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரும் கூட. இந்தப் படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்ஷன்ஸ் தயாரித்திருந்தது. இவர்கள் இருவரின் கூட்டணியில் வெளியான இந்தப் படம் குடும்ப ஆடியன்ஸை வெகுவாகவே கவர்ந்த்து. தியேட்டர் முழுவதும் ஆரம்பம் தொடங்கி முடியும் வரை சிரிப்புக்கு பஞ்சம் இல்லாமல் தான் படம் சென்றது.
ஆனால், இந்தப் படம் இரண்டு விதமான விமர்சனங்களையும் பெற்று, மக்களுக்கு பிடித்ததா இல்லையா என்ற குழப்பை ஏற்படுத்தியது. கோலமாவு கோகிலா படத்தில் லேடி சூப்பர் ஸ்டாரை போதைப் பொருள் கடத்த வைத்த இயக்குநர் நெல்சன், இந்த முறை சிவகார்த்திகேயனை பெண் குழந்தைகளை கடத்தும் நபராக சித்தரித்துள்ளார்.