தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Eps Vs Ops: ’இரட்டை இலை சின்னத்தை முடக்குங்கள்!’ தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனுத்தாக்கல்!

EPS vs OPS: ’இரட்டை இலை சின்னத்தை முடக்குங்கள்!’ தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனுத்தாக்கல்!

Kathiravan V HT Tamil
Mar 26, 2024 05:24 PM IST

”நடைபெற உள்ள நாடாளுமன்றத்தேர்தலில் தனக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க வேண்டும் இல்லை என்றால் வாளி சின்னம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ஓபிஎஸ் கோரிக்கை வைத்துள்ளார்.”

இரட்டை இலை சின்னம்
இரட்டை இலை சின்னம்

ட்ரெண்டிங் செய்திகள்

நடைபெற உள்ள நாடாளுமன்றத்தேர்தலில் தனக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க வேண்டும் இல்லை என்றால் வாளி சின்னம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ஓபிஎஸ் கோரிக்கை வைத்துள்ளார். 

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற அமைப்பை நடத்தும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார்.  

இந்த நிலையில், டெல்லியில் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்த பின்னர் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர் புகழேந்தி கூறுகையில், தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் பிரச்னையை விளக்கி கூறி உள்ளேன். நாளை மனுத்தாக்கலுக்கு கடைசி நாள் என்பதால் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன் என்ன செய்ய முடியுமோ அதை செய்கிறோம் என கூறி உள்ளார். 

தேர்தல் ஆணையம் நாங்கள் கேட்கும் சின்னத்தை கொடுக்கும். நாங்கள் வாளி உட்பட 2 அல்லது 3 சின்னங்களை கேட்டுள்ளோம். ஆர்.கே.நகர் தேர்தலின் போது, அதிமுக அம்மா, அதிமுக புரட்சித் தலைவி அம்மா என இரண்டு பிரிவுகள் பிரிக்கப்பட்டு, இரண்டு சின்னங்கள் தரப்பட்டது. தற்போது அதே போன்ற நிலைதான் நடக்கும். 

தேமுதிகவை கூட்டணியில் இருந்து வெளியேற்றினார்கள், ஆனால் கூட்டணிக்கு யாரும் வராததால் தேமுதிகவை தேடி சென்றுள்ளனர். பழனிசாமிக்கு ஒரு இடம் கூட மிஞ்சாது. ராமநாதபுரம் தேவர் ஐயாவின் ஊர், அங்கு அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தலைவராக ஓபிஎஸ் உள்ளார். 

ராமநாதபுரத்தில் நான் நிற்கிறேன் என கேட்டேன், ஆனால் அவரே நிற்பதாக சொன்னார். தேனி போல மாபெரும் வெற்றியை நாங்கள் பெறுவோம். 

அம்மாவுக்கு நான்தான் பிணை கொடுத்தேன், இரட்டை இலையை வைத்துக் கொண்டு 9 தேர்தலில் ஈபிஎஸ் தொடர் தோல்வியை சந்தித்துள்ளார். தோற்பதே ஈபிஎஸ்க்கு தொழிலாக போய்விட்டது. எல்லோரும் ஏற்று மக்கள் சொல்வது போல் கட்சியை நடத்தும் நிலை ஏற்படும் போது இரட்டை இலை கைக்கு வரட்டும். 

இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என நான்தான்  கேட்டுள்ளேன். ஓபிஎஸ், ஈபிஎஸ் கையெழுத்து போட்டுதான் இன்று அத்தனை எம்.எல்.ஏக்களும், எம்பிக்களும் உள்ளனர். 

கட்சி என்னுடையது, ஒருங்கிணைப்பாளரை மாற்ற முடியாது என நிலைப்பாடு எடுத்த பின்னர் கட்சியை விட்டு வெளியேற்றினார் நிச்சயமாக ஓபிஎஸ் அதை கேட்பார். 

நான் நீதிமன்றத்தை விமர்சிக்க விரும்பவில்லை, ஆனால் அதிமுக பெயரை ஓபிஎஸ் பயன்படுத்த கூடாது என்ற நீதிமன்ற தீர்ப்பை நாங்கள் எதிர்க்கிறோம். இது என்ன நியாயம், என்ன நீதி, இந்த தீர்ப்பு மட்டும் அல்ல; அந்த நீதிபதி மீதும் தனியாக புகார் கொடுக்க இந்த புகழேந்தி தயாராக உள்ளேன். 

இரட்டை இலை சின்னத்தை இன்று காலையோ அல்லது நாளையோ முடக்குவார்கள் என நான் சொல்ல மாட்டேன். அதற்கான முடிவை தேர்தல் ஆணையம்தான் எடுக்கும்.

நண்பர் உதயகுமார் தேர்தல் வேலையில் கைத்தேர்தவர், 5 பன்னீர் செல்வத்தைதானே கொண்டு வந்து உள்ளீர்கள், ஆனால் ராமநாதபுரத்தில் உள்ள அனைவரும் பன்னீர் செல்வம்தான், நீங்கள் எத்தனை பன்னீர் செல்வத்தை கொண்டு வந்தாலும், மக்களுக்கு இந்த பன்னீர் செல்வம் மட்டுமே தெரிவார் என புகழேந்தி கூறினார். 

WhatsApp channel