தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Aatral Ashok Kumar: ’583 கோடிப்பூ!’ அதிர வைத்த ஈரோடு அதிமுக வேட்பாளரின் சொத்து மதிப்பு!

Aatral Ashok Kumar: ’583 கோடிப்பூ!’ அதிர வைத்த ஈரோடு அதிமுக வேட்பாளரின் சொத்து மதிப்பு!

Kathiravan V HT Tamil
Mar 26, 2024 03:27 PM IST

”தன்னிடம் 10 கிலோ தங்கமும், தனது மனைவி கருணாம்பிகையிடம் 10 கிலோ தங்கமும் இருப்பதாக கூறி உள்ளார். தனது மனைவி கருணாம்பிகையின் சொத்து மதிப்பு 47 கோடி ரூபாய் என்றும், இருவரது பெயரிலும், வீடு, நிலம், அலுவலகங்கள், காலி மனைகள் உள்ளிட்டவை இருப்பதாக தனது வேட்புமனுவில் கூறி உள்ளார்”

ஈரோடு அசோக் குமார்
ஈரோடு அசோக் குமார்

ட்ரெண்டிங் செய்திகள்

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்கள்

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியை பொறுத்தவரை திமுக சார்பில் பிரகாஷ், அதிமுக சார்பில் ஆற்றல் அசோக் குமார், பாஜக கூட்டணி சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விஜயகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் கார்மேகன் முத்துவேல் ஆகியோர் போட்டியிடுகின்றனர். 

வேட்புமனுத்தாக்கல்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27 ஆகும். மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

வேட்புமனுத்தாக்கலில் என்ன இருக்கும்?

வேட்புமனுத்தாக்கல் செய்யும் போது வேட்பாளர் மற்றும் அவரை சேர்ந்த குடும்ப உறுப்பினர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள், வங்கி வைப்புத் தொகை, நிறுவனங்களில் வைத்திருக்கும் பரஸ்பர நிதி மற்றும் நிறுவன பங்குகள், காப்பீடு குறித்த விவரங்கள், கடன் பத்திரங்கள், தனிநபருக்கோ அல்லது நிறுவனங்களுக்கோ அளித்துள்ள கடன் விவரங்கள், கடன் வாங்கிய விவரங்கள், மோட்டார் வாகனங்கள் குறித்த விவரங்கள், வேட்பாளர் மீது பதியப்பட்டுள்ள வழக்குகள் ஆகியவற்றை தெரிவிக்க வேண்டும். வேட்புமனுத்தாக்கல் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மக்கள் பார்வைக்காக வெளியிட்டுள்ளது.

சொத்து மதிப்பு

ஈரோடு மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஆற்றல் அசோக் குமார் ஈரோடு மாவட்டம், கொடுமுடி அடுத்த புதுப்பாளையம் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் ஆவார். தற்போது ஈரோடு சொலங்கபாளையம் பகுதியில் வசித்து வருகிறார்.

1991ஆம் ஆண்டு கோவை பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அரசு பொறியியல் கல்லூரியில் பி.இ படித்த அவர், 1992ஆம் ஆண்டு அமெரிக்காவில் எம்.எஸ். படிப்பையும், 1996ஆம் ஆண்டு எம்பிஏ படிப்பையும் முடித்தார்.

மைக்ரோசாஃப்ட் மற்றும் இண்டெல் உள்ளிட்ட பன்னாநாட்டு நிறுவனங்களில் பணியாற்றி உள்ள ஆற்றல் அசோக் குமார், தற்போது பல்வேறு கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

பாஜகவில் இருந்த இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதிமுகவில் இணைந்தார். இவரது சொத்த மதிப்பு 583 கோடி ரூபாய் என தனது வேட்புமனுவில் ஆற்றல் அசோக் குமார் குறிப்பிட்டுள்ளார். வங்கி கணக்கில் 7 கோடி ரூபாய் இருப்பதாகவும், அசையும் சொத்து 526.53 கோடி ரூபாய் எனவும், அசையா சொத்து 56.95 கோடி ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தன்னிடம் 10 கிலோ தங்கமும், தனது மனைவி கருணாம்பிகையிடம் 10 கிலோ தங்கமும் இருப்பதாக கூறி உள்ளார். தனது மனைவி கருணாம்பிகையின் சொத்து மதிப்பு 47 கோடி ரூபாய் என்றும், இருவரது பெயரிலும், வீடு, நிலம், அலுவலகங்கள், காலி மனைகள் உள்ளிட்டவை இருப்பதாக தனது வேட்புமனுவில் கூறி உள்ளார்.

WhatsApp channel