தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Thangar Bachchan: ’தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்ததால் வந்த வினை!’ ஜோசியரை கைது செய்த அரசு!

Thangar Bachchan: ’தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்ததால் வந்த வினை!’ ஜோசியரை கைது செய்த அரசு!

Kathiravan V HT Tamil
Apr 09, 2024 02:18 PM IST

“பகுத்தறிவு கட்சி என்று கூறிக்கொள்ளும் திமுகவால் சோதிடத்தில் நல்ல செய்தி கூறியதைக் கூட தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால் அக்கட்சி எந்த அளவுக்கு முட்டாள் தனத்திலும், மூட நம்பிக்கையிலும் ஊறியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்”

தேர்தல் பரப்புரையில் கிளி ஜோசியம் பார்த்த பாமக வேட்பாளர் தங்கர் பச்சான்
தேர்தல் பரப்புரையில் கிளி ஜோசியம் பார்த்த பாமக வேட்பாளர் தங்கர் பச்சான்

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பாஜக கூட்டணியில் பாமக சார்பில் இயக்குநர் தங்கர் பச்சான் போட்டியிடுகிறார்.  

நேற்றைய தினம் கடலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்த தங்கர் பச்சான், கிளி ஜோசியர் ஒருவரிடம் ஜோசியம் பார்த்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரல் ஆனது. அதில் தங்கர் பச்சானுக்கு சீட்டு எடுத்து கொடுத்த கிளி, அய்யனார் படத்தை எடுத்து தந்தது, பின்னர் கிளிக்கு வாழை பழத்தையும் தங்கர் பச்சான் ஊட்டிவிட்டார். 

இந்த நிலையில் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கிளிகளை வளர்ப்பது குற்றம் என்பதால் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நடவடிக்கையை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் மாவட்டம் தென்னம்பாக்கம் அழகுமுத்து அய்யனார் ஆலயம் அருகில் கிளி சோதிடம் பார்த்து வந்த செல்வராஜ் என்பவரை தமிழக அரசின் வனத்துறை கைது செய்திருக்கிறது. கடலூர் தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் இயக்குனர் தங்கர்பச்சான் வெற்றி பெறுவார் என்று கிளிசோதிடம் பார்த்து கூறியதை தாங்கிக் கொள்ள முடியாமல் தான் இந்த பழிவாங்கும் நடவடிக்கையை திமுக அரசு மேற்கொண்டுள்ளது. பாசிசத்தின் உச்சமான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

தங்கர்பச்சான் வெற்றி பெறுவார் என்று கிளி சோதிடர் கூறியதையே தாங்கிக் கொள்ள முடியாத திமுக அரசு, தேர்தல் முடிவு அப்படியே அமைவதை எப்படி தாங்கிக் கொள்ளும்? சோதிடம் கூறியதற்காக கிளி சோதிடரை கைது செய்த திமுக அரசு, தங்கர்பச்சானுக்கு வாக்களித்ததற்காக கடலூர் தொகுதியைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்களை கைது செய்வார்களா? இந்த நடவடிக்கை மூலம் திமுகவின் தோல்வி பயம் அப்பட்டமாக தெரிகிறது. பகுத்தறிவு கட்சி என்று கூறிக்கொள்ளும் திமுகவால் சோதிடத்தில் நல்ல செய்தி கூறியதைக் கூட தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால் அக்கட்சி எந்த அளவுக்கு முட்டாள் தனத்திலும், மூட நம்பிக்கையிலும் ஊறியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

கிளியை கூண்டில் அடைத்தது குற்றம் என்றும், அதற்காகத் தான் சோதிடர் செல்வராஜ் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அரசுத் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான கிளி சோதிடர்கள் கிளிகளை கூண்டில் வைத்து தான் சோதிடம் பார்க்கிறார்கள். இப்போது கைது செய்யப்பட்ட சோதிடர் அதே இடத்தில் பல ஆண்டுகளாக சோதிடம் பார்த்து வருகிறார். அப்போதெல்லாம் அவர் கைது செய்யப்படவில்லை. மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆவாரா? என்று அவரது துணைவியார் நூற்றுக்கணக்கான சோதிடர்களிடம் கிளி சோதிடம் பார்த்திருப்பார். அந்த கிளி சோதிடர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. ஆனால், இப்போது தங்கர்பச்சானுக்கு சோதிடம் கூறிய பிறகு சோதிடர் கைது செய்யப்படுகிறார் என்றால் அதற்கான காரணத்தை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாட்டின் காடுகளில் லட்சக்கணக்கான மரங்களும், ஆயிரக்கணக்கான விலங்குகளும் அழிக்கப்படுகின்றன. அவற்றையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் திமுக அரசு, ஓர் ஏழை கிளி சோதிடரை கைது செய்து அதன் வீரத்தைக் காட்டியிருக்கிறது. அந்த சோதிடரின் பிழைப்பில் மண்ணைப் போட்டிருக்கிறது. இதற்குக் காரணமானவர்களுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என அன்புமணி கூறி உள்ளார். 

WhatsApp channel