Bhairava Temple: அதியமான் கட்டிய பைரவர் கோயில்!
கருவறையின் மூலவரின் திரு உருவில் நவகிரகங்கள், 12 ராசிகள் மற்றும் 27 நட்சத்திரங்கள் காணப்படுகின்றன.
தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் அமைந்துள்ளது. காசிக்கு அடுத்தபடியாக கால பைரவர் கோயில். சிவபெருமானின் அவதாரங்களில் ஒன்றாகப் பைரவர் விளங்குகின்றார். ஔவைக்கு நெல்லிக்கனியைக் கொடுத்த அதியமான் தான் இங்குள்ள தக்ஷன காசி உன்பந்த பைரவருக்குக் கோயிலைக் கட்டி உள்ளார்.
இக்கோயிலானது 1200 ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டது என வரலாறு கூறுகின்றது. அதியமான் அவையிலிருந்த வேத விர்பனர்களால், வேத மகரிஷிகள் காசிக்குச் சென்று பூஜை செய்த பின்பு இச்சிலைக் கொண்டுவரப்பட்டு தெற்கு திசை நோக்கி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. எதிரிகளுக்குப் பயந்து வாழ்ந்து வருபவர்களுக்கும் அருள் பாலித்தும், படைத்தல், காத்தல், அழித்தல் போன்ற முத்தொழிலையும் செய்வதால் இவரைக் கால பைரவர் என்று அழைக்கின்றனர்.
காவல் தெய்வமாக இவர் விளங்குவதால் நாயே இவரது வாகனமாக உள்ளது. இக்கோயிலின் மகா மண்டபம் நவகிரகங்களைக் கூரையாக வைத்து அமைக்கப்பட்டுள்ளது. கருவறைக்குள் செல்பவர்கள் குறுக்காகச் சென்று விடாமல் ஒன்பது கோரையின் கீழ் வரிசையாகச் சென்று கருவறையைத் தரிசனம் செய்து வர வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு இக்கோயில் கட்டப்பட்டுள்ளது.
கருவறையின் மூலவரின் திரு உருவில் நவகிரகங்கள், 12 ராசிகள் மற்றும் 27 நட்சத்திரங்கள் காணப்படுகின்றன. விநாயகர் சிலை கூட இல்லாத கோயிலில் மகாவீரரின் சிலை ஒன்று மட்டும் காணப்படுகின்றது. இக்கோயிலைக் கட்ட அதியமான் மன்னருக்கு மகாவீரர் உறுதுணையாக இருந்ததாகக் கூறப்படுகின்றது.
தேய்பிறை நாட்களில் நடைபெறும் சிறப்புப் பூஜையில் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன் நிறைவேற வேண்டும் எனக் கால பைரவருக்கு வெள்ளை பூசனிக்காயில் தீபம் ஏற்றி கோயில் வளாகத்தை 18 முறை வலம் வந்து பைரவரைத் தரிசனம் செய்தால் நவகிரக தோஷம் நீங்கி, குழந்தை பாக்கியம் கிடைக்கும், சனி தோஷம் நீங்கவும், திருமணத் தடை நீங்கவும், பில்லி, சூனியம் போன்றவை விலகும் எனப் பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
தேய்பிறை அஷ்டமி நாட்களில் 1008 கிலோ காய்ந்த மிளகாய் 108 கிலோ மிளகு போன்றவற்றைக் கொண்டு குருதி ஹோமம் செய்யப்பட்டு ராகு கால சிறப்பு வழிபாடும் செய்து பைரவருக்குச் சிறப்பு அபிஷேகங்கள் தீபாரதனைகள் நடைபெறுகின்றன.
வாரணாசியிலிருந்து கொண்டுவரப்பட்ட இரண்டு லட்சத்து 18 ஆயிரம் ருத்ராட்சைகளால் கட்டப்பட்ட பந்தலின் கீழ் அமர்ந்து பக்தர்களுக்குக் கால பைரவர் அருள்பாலிக்கின்றார்.