தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சூரிய தோஷம் நீங்கும் கோயில்!

சூரிய தோஷம் நீங்கும் கோயில்!

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 29, 2022 09:07 PM IST

சூரியனால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்க பரிகாரங்கள் செய்வது குறித்து இங்கே காண்போம்.

ஶ்ரீ புஷ்பரதேஸ்வரர் கோயில்
ஶ்ரீ புஷ்பரதேஸ்வரர் கோயில்

திருவள்ளூர் மாவட்டத்தில் மீஞ்சூரில் இருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த தலத்தில் புஷ்பரதேஸ்வரர் என்ற பெயருடன் அருள்பாலிக்கிறார் சிவபிரான். இவரை வழிபட்டு சூரியபகவான் பாவங்கள் நீங்கப் பெற்றதாகத் தலபுராணம் கூறுகிறது.

அதனாலேயே சூரியனால் ஏற்படும் தோஷங்கள் போக்கும் பரிகார தலமாக விளங்குகிறது இந்த ஞாயிறு திருக்கோவில். சூரியன் வழிபட்டதால் இங்குள்ள தீர்த்தம் சூரிய புஷ்கரணி என்றே பெயர் கொண்டுள்ளது.

தனிச்சன்னிதியில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார் சூரியபகவான். சூரியனால் ஏற்படும் தோஷங்கள் அகலப் பரிகாரங்களைச் செய்கிறார்கள் பக்தர்கள்.

பரிகாரம்

அலங்கரிக்கப்பட்ட கலசத்துக்குப் பூஜை செய்து, பக்தர்கள் கையில் மலர்களுடன் சங்கல்பம் செய்கிறார்கள். களத்திர தோஷம் நீங்கவும், வேலைவாய்ப்பு அமையவும், ஆரோக்கியம் பெருகும் என வெவ்வேறு பிரார்த்தனைகளுடன் நடக்கிறது சங்கல்பம்.

தாங்கள் வைத்துள்ள புஷ்பங்களைக் கலசத்தின் மேல் சமர்ப்பித்து வணங்குகிறார்கள். தொழுநோய் போன்றவை குணமாகச் சூரியனை வழிபடுவது சிறந்தது. தாமிர பாத்திரத்தில் கோதுமையை வைத்து அதில் சூரியனைப் பிரதிஷ்டை செய்து அல்லது சூரியனை வழிபட்டுத் தானமாக வழங்கினால் சூரியனால் ஏற்படும் தோஷங்கள் விலகும்.

ஆறு வாரம் அல்லது 11 வாரம் என்று சங்கல்பம் செய்து கொண்டு ஞாயிறு திருத்தலத்துக்கு வரவேண்டும். இங்கு வந்து சூரிய புஷ்கரணியில் நீராட வேண்டும். அந்த நீரை எடுத்து தலையில் தெளித்துக் கொள்ள வேண்டும்.

கோதுமை வைத்த தாமிர பாத்திரம், சிவப்பு வஸ்திரம், தாமரை பூ ஆகியவற்றைச் சூரியன் சன்னதியில் கொடுத்து அர்ச்சனை செய்ய வேண்டும். தங்கள் வயதிற்கு ஏற்ப தீபம் ஏற்ற வேண்டும். 6 முறை வலம் வந்து வழிபட வேண்டும். இப்படி ஆறு வாரம் அல்லது 11 வாரம் அதாவது ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபட்டால் சூரியனால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

WhatsApp channel