தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Vck Member Murder: சென்னையில் விசிக நிர்வாகி வெட்டிக்கொலை.. டீக்கடை முன்பு மர்ம கும்பல் வெறிச்செயல்

VCK Member Murder: சென்னையில் விசிக நிர்வாகி வெட்டிக்கொலை.. டீக்கடை முன்பு மர்ம கும்பல் வெறிச்செயல்

Karthikeyan S HT Tamil
Apr 27, 2023 11:59 AM IST

VCK Member Murder: சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

க்ரைம் - கோப்புபடம்
க்ரைம் - கோப்புபடம்

ட்ரெண்டிங் செய்திகள்

சென்னை, கேகே நகர் அம்பேத்கர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (40). விடுதலை சிறுத்தைகள் கட்சியில் கே.கே. நகர் பகுதிச் செயலாளராக பதவி வகித்து வந்த இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். ரமேஷ் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த நிலையில், இன்று காலை 8 மணியளவில் , கேகே நகர் பாரதிதாசன் சாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே உள்ள டீக்கடைக்கு டீ குடிக்கச் சென்றிருக்கிறார். 

அப்போது அங்கு நண்பர்களுடன் அவர் பேசிக்கொண்டிருந்தார். அங்கு திடீரென காரில் வந்த மர்ம கும்பல், ரமேஷை கத்தியால் சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு அங்கிருந்து காரில் தப்பிச் சென்றது. இதில் டீ கடை வாசலிலே ரமேஷ் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த டீக்கடைக்காரர் மற்றும் பொதுமக்கள் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து உடனடியாக அங்கு வந்த எம்ஜிஆர் நகர் போலீஸார், உயிரிழந்த ரமேஷின் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி் வைத்தனர். பின்னர் இக்கொலை சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அத்துடன் தப்பி ஓடிய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட ரமேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் கேகே நகர் பகுதிச் செயலாளராக பதவி வகித்து வந்தார். ரமேஷ் மீது தி.நகர், வடபழனி, கோடம்பாக்கம், எம்.கே.பி. நகர், எம்.ஜி.ஆர். நகர், கே.கே நகர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.  இதனிடையே, அவர் மீது தொடர்ந்து புகார் வந்ததால் கட்சி தலைமை, அவரின் பகுதிச் செயலாளர் பதவியை பறித்தது. இதனால் ரமேஷ் தற்போது விசிகவில் உறுப்பினராக மட்டும் இருந்து வந்தார். இந்நிலையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கேகே நகர் பகுதியில் காலையில் டீ கடை முன்பே ரமேஷ் வெட்டிபடுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்