Mandous cyclone: தமிழகத்தில் 6 மாவட்டங்களில் பேருந்துகள் இயங்காது!
சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தின் 6 மாவட்டங்களில் அரசு பேருந்துகள் சேவை இயங்காது என போக்குவரத்து துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுவடைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் நாளை (டிச.9) இரவு புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையைக் கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
புயல் காரணமாக, டிச., 9, 10 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அநேக இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
வானிலை மையத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து புயல் மற்றும் கனமழை தொடர்பாக செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலர் இறையன்பு இன்று (டிச.08) அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் அறிவுறுத்தியிருந்தார்.
இதைத்தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, அரியலூர் ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.9) விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இதனிடையே டிச.9 மற்றும் 10 ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த திருவள்ளூர் பல்கலைக் கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அந்த பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இந்தநிலையில், மாண்டஸ் புயல் நாளை இரவு மாமல்லபுரம் அருகே கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று இரவு அரசு பேருந்துகள் இயக்கப்படாது என போக்குவரத்து மேலாண்மை இயக்குநர் அறிவித்துள்ளார்.
பேருந்து நிறுத்தங்களில் அதிக கூட்டங்களை தவிர்க்க வேண்டும் எனவும் போக்குவரத்து மேலாண்மை இயக்குனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
டாபிக்ஸ்